Published : 27 Mar 2021 03:14 AM
Last Updated : 27 Mar 2021 03:14 AM

தேர்தல், வெயில் கடுமை கருதி தேவைப்பட்டால் மட்டுமே பராமரிப்பு பணி: மின்வாரியம் அறிவுறுத்தல்

சென்னை

சட்டப்பேரவை தேர்தல், ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிவது,வெயிலின் கடுமை கருதி, மின்தடைஏற்படாமல் இருக்க தேவைப்பட்டால் மட்டுமே மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

மின்னுற்பத்தி நிலையங்களில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தை, மின்வாரியம் மின்வழித்தடங்களில் அனுப்பி, மின்மாற்றி,மின்விநியோகப் பெட்டியின் உதவியுடன் மின்விநியோகம் செய்யப்படுகிறது. மின்மாற்றி, மின்விநியோகப் பெட்டி ஆகியவற்றில் எப்போதும் மின்சாரம் செல்வதால் அவை வெப்பத்துடன் இருக்கும்.

இதனால், குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணிகளைமேற்கொள்ள வேண்டும். இல்லையென்றால், மின்சாதனங்களில் பழுது ஏற்பட்டு மின்தடை ஏற்படும்.இதனால், துணைமின் நிலையம், மின்மாற்றிகள் உள்ளிட்டவற்றில் குறிப்பிட்ட இடைவெளியில் பராமரிப்பு பணி செய்யப்படுகிறது. இப்பணிக்காக, தொடர்புடைய இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம்.

இந்நிலையில், சட்டப்பேரவைதேர்தல் நடைபெற உள்ளதால் வேட்பாளர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், கரோனா தொற்று காரணமாக பல்வேறு நிறுவனங்களின் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணிபுரிகின்றனர். அத்துடன், வெயில் கடுமை அதிகரித்துள்ளதால், மின்தடை ஏற்படாமல் இருக்க, அவசியத் தேவைப்பட்டால் மட்டும் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மின்வாரிய பொறியாளர்களையும் மின்வாரியம் அறிவுறுத்தி உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x