Published : 25 Mar 2021 04:40 PM
Last Updated : 25 Mar 2021 04:40 PM

எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை; பழிவாங்கும் நடவடிக்கை - முத்தரசன் விமர்சனம்

எதிர்க்கட்சியினருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்துவது, உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கை என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (மார்ச் 25) வெளியிட்ட அறிக்கை:

"தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அரசியல் கட்சிகள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றிக் கொண்டுள்ளன. தேர்தல் நடைமுறைகளும் தொடங்கியுள்ளன.

இச்சூழலில், தமிழக மக்களின் ஒட்டுமொத்த உணர்வுகளும் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெறும் என அறுதியிடுகிறது. இதனை மெய்ப்பிக்கும் வகையில், கருத்துக்கணிப்புகள் யாவும் திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என உறுதிபடக் கூறுகிறது.

இத்தகைய சூழலில், வருமான வரித்துறையினர் வருமான வரி சோதனை என்ற பெயரில் ஜனநாயக அத்துமீறலில் ஈடுபடுகின்றனர்.

இன்று திமுகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எ.வ.வேலுவுக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரி சோதனை என்ற பெயரில் வருமான வரித்துறையினர் அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். நாடு முழுவதும் இதுபோன்ற ஜனநாயகத்திற்குப் புறம்பான முறைகளைப் பின்பற்றிதான் எதிர்க்கட்சிகள் மீது தாக்குதல் தொடுக்கிறது மத்திய பாஜக அரசு.

இத்தகைய செயல்கள் மூலம் திமுக தலைமையிலான கூட்டணியின் வெற்றியைத் தடுத்துவிட முடியாது. உள்நோக்கம் கொண்ட அப்பட்டமான பழிவாங்கும் நடவடிக்கைகள் ஜனநாயகத்திற்குப் புறம்பானது என எச்சரிக்கிறோம்".

இவ்வாறு இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x