Published : 22 Mar 2021 03:17 PM
Last Updated : 22 Mar 2021 03:17 PM

பதிவு செய்யப்பட்ட சிறிய கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்வது எப்படி?- உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில்

சென்னை

அங்கீகரிக்கப்பட்ட பெரிய கட்சிகள்போல் பதிவு செய்யப்பட்ட சிறிய கட்சிகள் மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்கக் கோரிய வழக்கில், வழக்கத்தில் உள்ள நடைமுறை குறித்து தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதிலாக அளித்ததை அடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதி வழங்கும்படி, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி, தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, “அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள், மாநிலம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதி அளிக்கப்படுவதைப் போல், பதிவு செய்யப்பட்ட எங்கள் கட்சிக்கும் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்ய அனுமதிக்க வேண்டும் எனத் தேர்தல் ஆணையத்துக்கு மனு அளித்தும் எந்த பதிலும் இல்லை” என மனுதாரர் கட்சி தரப்பில் வாதிடப்பட்டது.

இதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர், பதிவு செய்யப்பட்ட அங்கீகாரமில்லாத கட்சிகள், தொகுதி வாரியாக, தேர்தல் அதிகாரிகளுக்கு விண்ணப்பித்து, பிரச்சாரம் செய்ய அனுமதி பெறலாம் எனக் கடந்த 15ஆம் தேதியே பதிலளித்துள்ளதாகத் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் இந்த வாதத்தைப் பதிவு செய்த நீதிபதிகள், இந்த மனு மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனவும், தேர்தல் ஆணையத்தின் பதிலின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மனுதாரர் கட்சி எடுக்கலாம் எனவும் கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x