Published : 22 Mar 2021 03:04 PM
Last Updated : 22 Mar 2021 03:04 PM

பிரதமர் மோடி மார்ச் 30-ம் தேதி தாராபுரம்; ஏப்ரல் 2-ம் தேதி மதுரை, நாகர்கோவிலில் பிரச்சாரம்

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள பிரதமர் மோடி வரும், 30-ம் தேதி தாராபுரம் வருகிறார். தொடர்ந்து ஏப்., 2ம் தேதி மதுரை மற்றும் நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கிறார் என, தமிழக பாஜக மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி தெரிவித்தார்.

நீலகிரி மாவட்டம் உதகையில், பா.ஜ., வேட்பாளர் மு.போஜராஜனை ஆதரித்து பிரச்சாரம் செய்ய உதகை அருகே பி.மணிஹட்டி கிராமத்துக்கு தமிழக பா.ஜ., மேலிட பொறுப்பாளர் சி.டி. ரவி இன்று வந்தார். முன்னதாக, கோவையிலிருந்து ஹெலிகாப்டர் மூலம் உதகை தீட்டுக்கல்லில் வந்திறங்கி, காரில் சென்றார்.

நிருபர்களிடம் கூறும் போது,'மதுரையில், ஏப்ரல் 2ம் தேதி நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடியுடன், தமிழக முதல்வர், துணை முதல்வர் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்கின்றனர். வரும், 26ம் தேதி பாஜக தலைவர் ஜெ.பி. நட்டா, 1-ம் தேதி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்கின்றனர். தமிழகத்தில், பாஜக அ.தி.மு.க., உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கடுமையாக தேர்தல் பணியாற்றி வருகின்றனர். இதன் காரணமாக, அதிமுக, கூட்டணி, 234 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என, நம்பிக்கை உள்ளது.

உதகை தொகுதி பாஜக வேட்பாளர் மு.போஜராஜனை ஆதரித்து தேர்தல் பரப்புரை மேற்கொள்ள ஏப்., 1-ம் தேதி மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உதகையில் வருகிறார். இவ்வாறு, சி.டி.ரவி தெரிவித்தார்.

மதியம், உதகையில் ஒக்கலிக்கர் கல்யாண மண்டபத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்று கட்சியினருடன் தேர்தல் குறித்து ஆலோசனை நடத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x