Published : 21 Mar 2021 04:12 PM
Last Updated : 21 Mar 2021 04:12 PM

முதுகுளத்தூர் தொகுதியில் இந்திய லங்கடி விளையாட்டு அணியின் கேப்டன் தேவசித்தம் சுயேச்சையாகப் போட்டி

தனது தந்தையுடன் வந்து வேட்புமனுத் தாக்கல் செய்த தேவசித்தம்.

ராமேசுவரம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிடுகிறார் இந்திய லங்கடி விளையாட்டு அணியின் கேப்டன் தேவசித்தம்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் தேவேந்திர நகரைச் சேர்ந்தவர் தேவசித்தம் (33). தமிழகத்தின் பராம்பரிய விளையாட்டான (நொண்டியாட்டம்) லங்கடி அணியின் இந்திய அணியின் முன்னாள் கேப்டன். இவரது தலைமையில் இந்திய அணி 2014-ல் பூடானில் நடந்த தெற்கு ஆசியா கோப்பை, 2015-ல் நேபாளத்தில் நடந்த ஆசியா கோப்பை, 2017-ல் சிங்கப்பூரில் நடந்த உலகக்கோப்பையை வென்றுள்ளது. மேலும பல முறை சிறந்த ஆட்டக்காரர் விருதையும் தேவசித்தம் பெற்றுள்ளார்.

இந்திய அணிக்காக விளையாடினால் அந்த வீரருக்கு மாநில அரசு முதல் தர அந்தஸ்துடன் அரசுப் பதவியும் வழங்குவது வழக்கம். மறைந்த முதல்வர் ஜெயலலிதா தேவசித்ததிற்கு அரசு வேலை வழங்குவதாக தெரிவித்திருந்தார். ஆனால், அவர் மறைந்து நான்காண்டுகளுக்கு மேலாகியும் அரசு வேலையும் அவருக்கு கிடைக்கவில்லை.

இதனால் குடும்பத் தொழிலான விவசாயத்தைத் தொடர்ந்து செய்து வருகிறார். மேலும், லங்கடி விளையாட்டு வரும் தலைமுறையினருக்குச் சென்றடைய வேண்டும் என்பதற்காக பயிற்சி மையம் தொடங்கி ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிச் சிறுவர்களுக்கும், இளைஞர்களுக்கும் பயிற்சி அளித்து வருகிறார் தேவசித்தம்.

இந்நிலையில் சட்டப்பேரவைத் தேர்தலில் முதுகுளத்தூர் தொகுதியில் சுயேச்சையாகத் தேர்தலில் நிற்கிறார் தேவசித்தம்.

2017-ல் சிங்கப்பூரில் நடந்த லங்கடி விளையாட்டு உலகக்கோப்பையை வென்றபோது செய்த தேவசித்தம்

இதுகுறித்து தேவசித்தம் கூறியதாவது,

''மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஐயாவை நான் சந்தித்தபோது ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களுக்கு வழிகாட்டியாக நான் திகழ வேண்டும் என்று என்னைக் கேட்டுக் கொண்டார். அதிலிருந்து பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு லங்கடி விளையாட்டைப் பயிற்சி அளித்து வருகின்றேன்.

கடந்த 12 ஆண்டுகளாக லங்கடி விளையாட்டை ஊக்குவிக்க பல்வேறு அரசியல்வாதிகளைச் சந்தித்து முறையிட்டும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், என்னை சில அரசியல்வாதிகள் அணுகி தங்கள் கட்சிகளில் சேருவதற்குக் கோரிக்கை வைத்தனர். நான் மறுத்துவிட்டேன். இதனால் தேர்தலில் நிற்க முடிவெடுத்தேன்.

நான் சுயேச்சையாக நிற்பதால் எந்த ஒரு தலைவரின் உத்தரவுக்காகவும் காத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. நான் ஜெயித்தால் வறட்சிக்குப் பெயர் போன முதுகுளத்தூர் தொகுதியை முன்னேற்றவும், தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டுகளை ஊக்கப்படுத்தவும் நடவடிக்கை எடுப்பேன்''.

இவ்வாறு தேவசித்தம் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x