Published : 21 Mar 2021 10:53 AM
Last Updated : 21 Mar 2021 10:53 AM

நீட் முதுகலைத் தேர்வுகள்; 11,013 தமிழக மாணவர்களுக்கு தமிழகத்திலேயே மையங்கள்: சு.வெங்கடேசன் கோரிக்கை ஏற்பு

நீட் முதுகலை தேர்வுக்கு மாணவர்கள் ஆன்லைன் பதிவின் போது தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்காமல் மற்ற மையங்களுக்கு பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்குமே தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்க தேசிய தேர்வுக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளும் என சு.வெங்கடேசன் எம்.பி. கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி சு.வெங்கடேசன் அலுவலக செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

“நீட் முதுகலைத் தேர்வுகளுக்கான தமிழ்நாடு, புதுச்சேரி மையங்கள் ஆன்லைன் விண்ணப்பங்களுக்கான நேரம் தொடங்கி 4 மணி நேரத்திற்குள்ளாகவே நிரம்பிவிட்டதை சுட்டிக் காட்டி சு. வெங்கடேசன், தேர்வர்கள் அனைவருக்கும் தமிழகம், புதுச்சேரியிலேயே மையங்கள் அமைக்கப்பட வேண்டுமென பிப்ரவரி 24 அன்று கடிதம் மூலம் வலியுறுத்தியிருந்தார். அக் கோரிக்கையை தேசிய தேர்வுக் கழகம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தற்போது பதில் அளித்துள்ளது.

முதல் பதில்

தேசிய தேர்வுக் கழக நிர்வாக இயக்குனர் பவானிந்திரா லால் மார்ச் 3 அன்று அளித்த முதல் பதிலில்
"அஞ்சல் முகவரி உள்ள மாநிலத்தில் மையத்தை ஒதுக்க எல்லா முயற்சிகளையும் மேற்கொள்ளுமென்றும், அது முடியாத பட்சத்தில் அருகில் உள்ள மாநிலங்களின் மையங்கள் ஒதுக்கப்படுமென்றும்" தெரிவித்திருந்தார்.

கட்டமைப்பு, நிர்வாக வசதிகளைக் காரணம் காட்டிய அவர் கோவிட் சூழலில் தனி மனித விலகலுக்காக அடுத்த இருக்கைகளை காலியாக விட்டு விட்டு தேர்வு நடத்த வேண்டிய கட்டாயம் இருப்பதையும் சுட்டிக் காட்டியிருந்தார்.

அதன் மீது மார்ச் 8 அன்று மீண்டும் கடிதம் எழுதிய சு. வெங்கடேசன் எம்.பி, கோவிட் சூழலுக்கு தனி மனித விலகல் அவசியம்; ஆகவே மையங்களில் இட நெருக்கடி என்று கூறி கோவிட் சூழலில் தேர்வர்களை வெளி மாநிலங்களுக்கு பயணிக்கச் செய்வது முரணான அணுகுமுறையல்லவா என்பதை சுட்டிக் காட்டினார்.

மார்ச் 19 கடிதத்தில் உறுதி

மார்ச் 19 அன்றைய தேசிய தேர்வுக் கழகத்தின் கடிதத்தில் "8131 தமிழக தேர்வர்களுக்கும், 63 புதுச்சேரி தேர்வர்களுக்கும் ஏற்கனவே சம்பந்தப்பட்ட மாநிலத்திற்குள்ளேயே தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டு விட்டன. மொத்தம் 11013 தேர்வர்களுக்கு தமிழகத்திலும், 603 தேர்வர்களுக்கு புதுச்சேரியிலும் அஞ்சல் முகவரிகள் உள்ளன.

அவர்கள் ஆன்லைன் பதிவின் போது தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்காமல் மற்ற மையங்களுக்கு பதிவு செய்திருந்தனர். அவர்கள் அனைவருக்குமே தமிழக, புதுச்சேரி மையங்கள் கிடைக்க தேசிய தேர்வுக் கழகம் எல்லா முயற்சிகளையும் மேற் கொள்ளும்" என உறுதியளித்துள்ளது.

11,013 பேருக்கு பலன்

சு. வெங்கடேசன் கோரிக்கையால் 11600 தமிழகத் தேர்வர்கள் பலன் பெறவுள்ளனர். கோவிட் காலத்தில் அனாவசியப் பயணங்களைத் தவிர்த்து தமிழகம் புதுச்சேரியிலேயே தேர்வு எழுதும் வாய்ப்பு கிட்டியுள்ளது”.

இவ்வாறு அந்தச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x