Published : 20 Mar 2021 05:17 PM
Last Updated : 20 Mar 2021 05:17 PM

எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் ஸ்டாலின்: முதல்வர் பழனிசாமி பேச்சு

எதிர்கட்சிக் தலைவர் பதவியையாவது தக்கவைத்துக் கொள்ளுங்கள் என, திமுக தலைவர் ஸ்டாலினுக்கு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதல்வருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மார்ச் 20) கள்ளக்குறிச்சி மாவட்டம், ரிஷிவந்தியம் சட்டப்பேரவைத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் எஸ்.கே.டி.சி ஏ. சந்தோஷை ஆதரித்துப் பேசியதாவது:

"அதிமுக தலைமையிலே ஒரு வலுவான கூட்டணியை அமைத்துள்ளோம். அதிமுக அரசு தொடர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றோம். கொடுக்கின்ற வாக்குறுதிகளை நிறைவேற்றுகின்ற கட்சி அதிமுக.

ஜெயலலிதா 2011 தேர்தல் அறிக்கையிலே விலையில்லா மின்விசிறி, மிக்சி, கிரைண்டர் வழங்குவோம் என அறிவித்தார். அதன்படி திட்டத்தினை முழுமையாக நிறைவேற்றினார். கருணாநிதி 2006 தேர்தல் அறிக்கையிலே நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் தருவேன் எனக் கூறி தேர்தலிலே வெற்றி பெற்றார். ஆனால், யாருக்கும் ஒரு கையளவு நிலம் கூட கொடுக்கவில்லை. இதுகுறித்து சட்டப்பேரவையிலே அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் கேள்வி எழுப்பியபோது, கிண்டலாக பதில் கூறினார். அது அவைக்குறிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மக்களை ஏமாற்றுகின்ற கட்சி திமுக. அது ஒரு அராஜக கட்சி. ஆட்சியில் இல்லாத, இப்பொழுதே அதிகாரிகளை மிரட்டுகிறார்கள் என்றால் ஆட்சிக்கு வந்தால் அதிகாரிகள் செயல்பட முடியுமா? மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா? ஆனால், அதிமுகவில் சட்டத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். இந்தியாவிலேயே சட்டம் ஒழுங்கினைப் பேணிக்காப்பதில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாகத் திகழ்கிறது.

ஒரு முதல்வரை எப்படிப் பேச வேண்டும் என்பது கூட தெரியாத தலைவர் என்றால் அது திமுக தலைவர் தான். ஜெயலலிதா மறைந்தவுடன், கட்சி உடைந்துவிடும், ஆட்சி கவிழ்ந்துவிடும் என்று நினைத்தார்கள். அது நடக்கவில்லை. அந்த எரிச்சல் அதனால் இப்படிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இப்படி ஒரு விவசாயி முதல்வராக வருவார் என்று அவர்களுக்குத் தெரியவில்லை. இன்றைக்கும் மக்களுடைய ஆதரவோடும், இறைவனின் அருளாசியோடும் இந்தப் பதவியில் இருக்கின்றேன்.

உள்ளத்தில் நல்ல எண்ணம் இருந்தால்தான் உயர முடியும். ஸ்டாலின் கெட்ட எண்ணம் படைத்தவர். எதிர்க்கட்சித் தலைவர் பதவியையாவது தக்க வைத்துக்கொள்ளுங்கள் ஸ்டாலின்.

எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருபெரும் தலைவர்களும் நாட்டு மக்களைத் தங்கள் வாரிசுகளாகக் கருதி பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தினார்கள். ஆனால், திமுகவில் அப்படியல்ல, அவர்கள் நாட்டு மக்களைப் பார்க்கவில்லை, வீட்டு மக்களை எண்ணித்தான், திட்டங்களைத் தீட்டி கொள்ளை அடித்தனர். வீட்டு மக்களுக்கு இயங்குகின்ற கட்சி திமுக. அந்த இருபெரும் தலைவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் மக்களுக்காக உழைத்தார்கள். கருணாநிதி குடும்பத்திற்கு, உழைப்பு என்றால் என்னவென்றே தெரியாது.

அப்படிப்பட்ட குடும்பத்தில் இருந்து வந்த ஸ்டாலின் முதல்வராக துடித்துக் கொண்டிருக்கிறார். இங்கு மக்களே நீதிபதிகள், மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு. மக்கள் நல்ல தீர்ப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். உங்கள் அவதூறு பேச்சுக்கெல்லாம் நாங்கள் அடிபணிவது இல்லை. எது நல்லது, எது கெட்டது எனப் பிரித்துப் பார்க்கக்கூடிய மக்கள் தமிழ்நாட்டு மக்கள். மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கின்ற நல்லாட்சியை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x