Published : 19 Mar 2021 10:07 AM
Last Updated : 19 Mar 2021 10:07 AM

என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்குத்தான்: திருப்பூரில் கமல் உருக்கம்

படம்: இரா.கார்த்திகேயன்.

திருப்பூர்

என் எஞ்சிய வாழ்க்கை மக்களுக்குத்தான் என்றும், இது திரைப்பட வசனம் இல்லை என்றும் திருப்பூரில் நடிகர் கமல்ஹாசன் உருக்கமாகப் பேசினார்.

திருப்பூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் போட்டியிடும் திருப்பூர் வடக்கு சு.சிவபாலன், திருப்பூர் தெற்கு அனுஷா, பல்லடம் தொகுதி மயில்சாமி, அவிநாசி மருத்துவர் வெங்கடேஷ்வரன், தாராபுரம் சார்லி ஆகிய வேட்பாளர்களை ஆதரித்து, அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் நேற்றிரவு நடந்த பொதுக்கூட்டத்தில் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:

''எங்களின் வேட்பாளர்கள் புதிய அரசியல் மாற்றத்தின் முகங்கள். ஆட்சியில் அமர்ந்தால் கூட நாங்கள் வெற்றியாளர்களாகக் கருதமாட்டோம். நாங்கள் வகுத்த திட்டங்களை நிறைவேற்றும்போதுதான், வெற்றியாளர்கள். வழக்கமாக நீங்கள் எங்களுக்கு வாக்களித்தால், இதெல்லாம் செய்வோம் என மயக்கும் வாக்குறுதிகளை நாங்கள் தரமாட்டோம். கட்சி ஆரம்பித்தபோது, அடுத்த அமாவாசை வரை தாங்காது என்றார்கள். இன்றைக்குச் சரியான வயதில் இங்கு வந்து நின்று கொண்டிருக்கிறோம்.

பணமதிப்பு நீக்கம் வந்தபோது, அதனை நான் வரவேற்றேன். ஆனால் , அடுத்த 3 மாதங்களில் அதன் குட்டு வெளிப்பட்டது. பணமதிப்பு நீக்கத்தால் பெரும் பாதிப்பு. கொங்கு மண்டலமே குலுங்கியது. அடுத்ததாக சர்ஜிக்கல் ஸ்டிரைக் ஜிஎஸ்டி. இன்றைக்கு கேஸ் விலை.

நல்ல எதிர்காலத்தை நம்பித்தான் இந்தக் கூட்டம் வந்துள்ளது. இலவசம் யாருக்கு வேண்டும். வேலை தந்தால் முதலாளியாக மாறுவார்கள். இலவசத்தைத் தந்து மக்களை மேலும் ஏழ்மையாக்க வேண்டாம். எங்களிடம் ஆட்சியைத் தந்தால், சட்டம் மற்றும் ஒழுங்கு இலவசம். உலகத் தரத்தில் அரசுப் பள்ளி மற்றும் அரசு மருத்துவமனைகளில் இலவசக் கல்வி, இலவச மருத்துவம் வழங்கப்படும். அரசியல் எனக்குத் தொழில் இல்லை. ஆனால், இதனை முழுநேரமாகச் செய்பவர்களை விடமாட்டேன்.

தாமதமாக அரசியலுக்கு வந்தாலும், என் எஞ்சிய வாழ்க்கை உங்களுக்குத்தான். இது திரைப்பட வசனம் இல்லை. என் பிள்ளைகள் அரசியலுக்கு வரவில்லை; நான்தான் வந்துள்ளேன். எனக்குப் பின்னால் வரும் தலைவர்கள், இந்தக் கூட்டத்தில் கூட இருக்கலாம்''.

இவ்வாறு கமல் தெரிவித்தார்.

மத்திய அரசு மீது கமல் மவுனம்

மநீம பொருளாளர் திருப்பூர் சந்திரசேகர் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாக, வருமான வரித்துறை தொடர் சோதனை நடத்தி வருவது தொடர்பாகக் கமல்ஹாசன் காட்டமாகப் பேசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், எந்த ஒரு இடத்திலும் அதனைக் காட்டிக்கொள்ளவில்லை. பேச்சிலும் வெளிப்படுத்தவில்லை.

பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி மற்றும் கேஸ் விலை விஷயங்களில் மட்டும் மத்திய அரசைச் சாடினார். அதைத் தொடர்ந்து இரு திராவிடக் கட்சிகளையும் பேச்சில் தொடர்ந்து விமர்சித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x