Last Updated : 19 Mar, 2021 03:15 AM

 

Published : 19 Mar 2021 03:15 AM
Last Updated : 19 Mar 2021 03:15 AM

கட்சித் தலைமை அறிவுறுத்தியதால் ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் உறுதிமொழிப் பத்திரம்: மீண்டும் தாக்கல் செய்த திமுக வேட்பாளர்கள்

விருதுநகர்

திமுக வேட்பாளர்கள் அனைவரும் ரூ.50-க்கு பதிலாக ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் மீண்டும்சுய விவரங்களை குறிப்பிட்டு தாக்கல் செய்யுமாறு திமுக தலைமை திடீரென அறிவுறுத்தியுள்ளது.

சட்டப் பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது. கடந்த 15-ம் தேதி பெரும்பாலான திமுக வேட்பாளர்கள் வேட்புனு தாக்கல் செய்தனர். விருதுநகர் தொகுதியில் திமுக வேட்பாளர் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், அருப்புக்கோட்டை தொகுதி வேட்பாளர் சாத்தூர் ராமச்சந்திரன், திருச்சுழிதொகுதி வேட்பாளர் தங்கம்தென்னரசு ஆகியோர் கடந்த திங்கள்கிழமை வேட்புனு தாக்கல் செய்தனர்.

வேட்புனு தாக்கலின்போது, ரூ.20 மதிப்புள்ள முத்திரைத் தாளில்தேர்தல் ஆணையத்தால் வரையறுக்கப்பட்ட படிவம் 26-ல் வேட்பாளரின் முழு விவரத்தை பூர்த்திசெய்து உறுதிமொழிப் பத்திரத்தை தாக்கல் செய்ய வேண்டும். ஆனால், திமுக வேட்பாளர்கள் ரூ.20-க்கு பதிலாக ரூ.50 மதிப்பிலான முத்திரைத் தாளில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தனர்.

இந்நிலையில், ஏற்கெனவே வேட்புமனுவை தாக்கல் செய்த வேட்பாளர்கள், உறுதிமொழிப் பத்திரத்தை ரூ.100 மதிப்பிலான முத்திரைத்தாளில் தயார் செய்து மீண்டும் சம்பந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்ய திமுக கட்சித் தலைமை அனைத்து வேட்பாளர்களுக்கும் நேற்று அறிவுறுத்தியது.

அதன்படி, விருதுநகர் மாவட்ட திமுக வேட்பாளர்கள் அனைவரும் ரூ.100 மதிப்பிலான முத்திரைத்தாளில் உறுதிமொழிப் பத்திரம் தயார்செய்து நேற்று மீண்டும் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தாக்கல் செய்தனர்.

இதுகுறித்து திமுகவினரிடம் கேட்டபோது, ரூ.100 மதிப்புள்ள முத்திரைத்தாளில் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என கட்சித் தலைமை அறிவுறுத்தியது. அதன்படி செய்து விட்டோம். இதற்கான காரணம் தெரியவில்லை என்று கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x