Last Updated : 17 Mar, 2021 03:14 AM

 

Published : 17 Mar 2021 03:14 AM
Last Updated : 17 Mar 2021 03:14 AM

திமுக வேட்பாளர் பெயரை உச்சரிக்கவே கூடாது: அதிமுகவினருக்கு தடை போட்ட செல்லூர் ராஜூ

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவை அம்மா என்றும், சசிகலாவை சின்னம்மா என்றும் அதிமுகவினர் அழைத்தனர். அதிமுகவில் இருந்து அமமுக பிரிந்தபிறகு அந்த கட்சியினர் சின்னம்மா என்ற வார்த்தையை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தினர். செய்தியாளர் சந்திப்பின்போதும் செல்லூர் கே.ராஜூ, ஓ.எஸ்.மணியன் போன்ற அதிமுக அமைச்சர்களும் சின்னம்மா என்ற வார்த்தையை பவ்யமாக பயன்படுத்தினர்.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளிவந்த சில நாட்களில் அரசியலை விட்டே ஒதுங்குவதாக சசிகலா அறிவித்தார். இதன்பிறகு சின்னம்மா என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுவதில்லை.

இந்நிலையில், மதுரை மேற்குத் தொகுதியில் திமுக சார்பில் சின்னம்மாள் என்ற மூத்த திமுக நிர்வாகி வேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு எதிராக நிற்பவர் என்பதால் அவரது பெயரை அடிக்கடி உச்சரிக்க வேண்டிய நிலை கட்சியினருக்கு உள்ளது.

இருப்பினும் தேர்தல் பிரச்சாரம், கூட்டங்களில் அவரது பெயரைக் குறிப்பிடும்போது அது சசிகலாவை குறிப்பிடுவது போன்றும், அவருக்கு எதிராகப் பேசுவது போன்றும் ஆகிவிடக் கூடாது என்பதால், அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கட்சியினரிடம் அந்தப் பெயரை உச்சரிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொண்டதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x