Published : 14 Nov 2015 01:05 PM
Last Updated : 14 Nov 2015 01:05 PM

வானிலை முன்னறிவிப்பு: தீவிரமடைகிறது பருவமழை

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளதால் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை நீடிக்கும். மேலும், நாளை(ஞாயிற்றுக்கிழமை) மதியம் பலத்த காற்று வீசக் கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கடந்த மாதம் 28-ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலைகளால் சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பலத்த மழை பெய்துவருகிறது. மேலும், காற்றழுத்த மண்டலம் கடந்த 7–ம் தேதி கடலூர் அருகே கரையைக் கடந்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது வலுப்பெற்று காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் தமிழகத்தில் பருவ மழை மேலும் தீவிரமடைந்து, அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் இன்று செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது மேற்கு திசை நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணிக்கு தென்மேற்கு வங்கக் கடலை ஒட்டியுள்ள பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால், கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அனேக இடங்களில் மழை பெய்தது.

மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளது. அது தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதனால், வடகிழக்கு பருவமழை தீவிரமடையும். இந்தக் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது சென்னைக்கு தென்கிழக்கே 1,250 கி.மீ. தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இதன் காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் கனமழை பெய்யும். தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்களில் நாளை மதியத்துக்கு மேல் மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில் காற்று வீசக் கூடும். எனவே, மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம். சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் இருக்கும். அவ்வப்போது மழையோ அல்லது கனமழையோ பெய்யக் கூடும்.

இவ்வாறு பாலச்சந்திரன் கூறினார்.

கடந்த 24 மணி நேரத்தில் மிக அதிகபட்சமாக ஒட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x