Published : 13 Mar 2021 06:23 PM
Last Updated : 13 Mar 2021 06:23 PM

அரசியலில் பெண்களைச் சில ஆண்கள் வெற்றி பெற விடுவதில்லை: குஷ்பு பேச்சு

அரசியலில் பெண்களைச் சில ஆண்கள் வெற்றி பெற விடுவதில்லை என்று பாஜகவைச் சேர்ந்த குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பாஜகவைச் சேர்ந்த குஷ்பு, திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், அதிமுக செய்தித் தொடர்பாளர் அப்சரா ரெட்டி, மகிளா காங்கிரஸ் தேசியப் பொதுச் செயலாளர் செளமியா ரெட்டி உள்ளிட்டோர் இன்று கலந்துகொண்டு அரசியலில் பெண்களின் பங்களிப்பு குறித்துப் பேசினர்.

நிகழ்ச்சியில் குஷ்பு பேசும்போது, ''அரசியல் என்று வரும்போது சில தரப்பட்ட ஆண்கள் இருக்கிறார்கள், அவர்கள், பெண்களை வெற்றி பெற விடுவதில்லை. பெண்கள் வெற்றி பெறுவது சரியல்ல என்று நினைக்கிறார்கள். இதுதான் அடிப்படைப் பிரச்சினை. அரசியலில் பெண்களின் உத்தரவை ஏற்கப் பெரும்பாலான ஆண்கள் தயாராக இல்லை.

இந்திரா காந்தியையும், ஜெயலலிதாவையும் பாருங்கள். அவர்கள் இருவரும் உண்மையில் ஆண் மைய உலகத்தில் ஆண்களாகத்தான் இருந்தார்கள். எந்தத் துறையுமே ஆண்களுக்கான் உலகம் கிடையாது. நான் பெண்ணியவாதி கிடையாது. இங்கு இருக்கும் அனைத்து ஆண்களைப் போல நானும் சமம்தான்.

படங்களிலும் அரசியல் நிகழும், குழுவாதம் இருக்கும், வாரிசு அரசியல் இருக்கும். ஆனால், இறுதியில் திறமைதான் வெல்லும்'' என்று குஷ்பு தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் தமிழச்சி தங்கபாண்டியன் பேசும்போது, ''நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து, பெண்களுக்கான 50 சதவீத இட ஒதுக்கீடு நாடாளுமன்றத்தில் நிறைவேறும் நாளுக்காகக் காத்திருக்கிறோம். ஏனெனில் அது எங்களின் பிறப்புரிமை'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x