Published : 09 Nov 2015 02:29 PM
Last Updated : 09 Nov 2015 02:29 PM

குமரி மாவட்டத்தில் தொண்டர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருள் வழங்கி அசத்தும் அதிமுக

தீபாவளி பண்டிகை கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ள நிலையில், கன்னியாகுமரி மாவட்ட அதிமுக சார்பில் அதன் தொண்டர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழக அளவில் தேசிய கட்சிகள் வலுவாக உள்ள மாவட்டம் கன்னியாகுமரி. இங்கு பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் சம பலத்தில் உள்ளன. அண்மைக்காலமாக திராவிட கட்சிகளும் இங்கு வலுவாக அடித்தளமிட்டு வருகின்றன.

கடந்த மக்களவைத் தேர்தலின் போது தமிழகம் முழுவதும் 37 தொகுதிகளில் வெற்றி பெற்ற அதிமுகவுக்கு கன்னியாகுமரி தொகுதியில் மூன்றாவது இடமே கிடைத்தது. அதன் பின்பு அதிமுகவின் மாவட்ட செயலாளராக முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் நியமிக்கப்பட்டார். அதுவரை அலுவலகமே இல்லாமல் இயங்கி வந்த குமரி அதிமுகவுக்கு அதன் பின்பு தொகுதி வாரியாக அலுவலகம் திறக்கப்பட்டது.

ஒன்றியம், நகரம் வாரியாக பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. மாற்றுக் கட்சியினர் பலர், அதிமுகவில் இணையும் நிகழ்வும் ஒருங்கிணைக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கு ஊராட்சி, பேரூராட்சி செயலாளர்கள், அனைத்து நிலை நிர்வாகிகள் ஆகியோருக்கும், கட்சியில் ஈடுபாட்டுடன் உழைத்துக் கொண்டிக்கும் தொண்டர்களுக்கும் அதிமுக மாவட்ட செயலாளர் தளவாய் சுந்தரம் ஏற்பாட்டில் பரிசு பொருட்கள் வழங்கப்படுகின்றன. அதிமுக கரை வேஷ்டி, சேலை, சட்டை துணி, இனிப்பு ஆகியவை வழங்கப்படுகின்றன.

குமரி மாவட்டத்தில் கட்சித் தொண்டர்களுக்கு பரிசு வழங்கப்படுவது இதுவே முதல் முறையாகும். இதனால், அரசியல், கட்சி என்கின்ற உணர்வையும் தாண்டி குடும்பம் என்ற உணர்வு ஏற்பட்டுள்ளதாக நெகிழ்ச்சியுடன் கூறுகின்றனர் அதிமுக தொண்டர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x