Published : 10 Mar 2021 08:49 PM
Last Updated : 10 Mar 2021 08:49 PM

மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கை ஓங்கியது: ஆதரவாளர்களுக்கு சீட் வாங்குவதில் கோட்டைவிட்ட செல்லூர் ராஜூ, ராஜன் செல்லப்பா

மதுரை

மதுரை மாவட்டத்தில் அதிமுக 8 தொகுதிகளுக்கு வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது. இதில், அமைச்சர் செல்லூர் கே.ராஜூவும், விவி.ராஜன் செல்லப்பாவும், தனது ஆதரவாளர்கள் ஒருவருக்குக் கூட ‘சீட்’ பெற்றுக்கொடுக்க முடியாத நிலையில் அமைச்சர் ஆர்பி.உதயகுமார் தன்னுடைய மாவட்டத்தில் மட்டுமில்லாது மற்ற மாவட்டங்களிலும் தனது ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ வாங்கிக் கொடுத்து கட்சியில் தனது செல்வாக்கைக் காட்டியுள்ளார்.

மதுரை மாவட்டத்தில் மொத்தம் 10 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மதுரை மத்தி, மதுரை கிழக்கு தவிர மற்ற 8 தொகுதிகளை அதிமுக கைப்பற்றியது. அது அக்கட்சி ஆட்சி அமைக்க பெரிதும் உதவியது.

தற்போது அதிமுக 8 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது. மதுரை மேற்கு தொகுதியில் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, மதுரை தெற்கில் தற்போதைய எம்எல்ஏ எஸ்.சரவணன், மதுரை கிழக்கில் முன்னாள் எம்.பி ஆர்.கோபாலகிருஷ்ணன், திருப்பரங்குன்றத்தில் மதுரை முன்னாள் மேயருமான விவி.ராஜன் செல்லப்பா (வடக்கு தொகுதி எம்எல்ஏ), திருமங்கலத்தில் வருவாய்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மேலூரில் சிட்டிங் எம்எல்ஏ பி.பெரிய புள்ளான், சோழவந்தானில் சிட்டிங் எம்எல்ஏ கே.மாணிக்கம், உசிலம்பட்டியில் மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அவைத் தலைவர் பி.அய்யப்பபன் போட்டியிடுகின்றனர்.

வடக்கு தொகுதி பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இங்கு பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.ஸ்ரீனிவாசன் போட்டியிட இருப்பதாக அக்கட்சியினர் கூறுகின்றனர்.

மதுரை மத்திய தொகுதிக்கு வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. இந்தத் தொகுதியும் தமாகாவிற்கு ஒதுக்கப்படலாம் எனவும், அங்கு வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.கே.ராஜேந்திரன் நிறுத்தப்படலாம் என அக்கட்சியினர் தெரிவித்தனர்.

உசிலம்பட்டி எம்எல்ஏ நீதிபதிக்கு இந்த முறை போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை. அவருக்குப் பதிலாக அமைச்சர் ஆர்பி.உதயகுமாரின் ஆதரவாளரான மேற்கு மாவட்ட அவைத் தலைவர் பி.அய்யப்பனுக்கு ‘சீட்’ வழங்கப்பட்டுள்ளது. இவர் திருமங்லம் தொகுதிக்கு உட்பட்ட செக்கானூரணியைச் சேர்ந்தவர். தற்போது இவர் மாவட்ட கவுன்சிலராக உள்ளார்.

மதுரை கிழக்கு தொகுதியில் முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் மாநகராட்சி துணை மேயராக இருந்தவர். 2014ம் ஆண்டு மக்களவைத் தேர்லில் இவருக்கு மதுரை தொகுதியில் போட்டியிட ஜெயலலிதா ‘சீட்’ வழங்கினார்.

அந்தத் தேர்தலில் வெற்றிபெற்று எம்.பி.யானார். தற்போது அதிமுக வழிகாட்டுக்குழு உறுப்பினராகவும், தேர்தல் பிரிவு இணைச் செயலாளராகவும் உள்ளார்.

இவர் ஓ.பன்னீர்செல்வத்தின் தீவிர ஆதரவாளர். அவர் அதிமுகவில் இருந்து விலகி தர்மயுத்தம் நடத்தியபோது முதல் எம்பியாக அவருக்கு ஆதரவு தந்தவர் கோபாலகிருஷ்ணன். இவர் வடக்கு தொகுதியில் போட்டியிடவே ஆர்வம் காட்டியநிலையில் கிழக்கு தொகுதி வழங்கப்பட்டுள்ளது.

சென்றமுறை வெற்றிப்பெற்ற 8 எம்எல்ஏகளில் 5 பேர் மீண்டும் அதே தொகுதிகளில் போட்டியிடுகின்றனர். மதுரை வடக்கு தொகுதியில் எம்எல்ஏவாக உள்ள விவி.ராஜன் செல்லப்பா, தொகுதி மாறி இந்த முறை திருப்பரங்குன்றத்தில் போட்டியிடுகிறார். வடக்கு தொகுதியில் அதிமுகவில் முன்னாள் எம்எல்ஏ ராஜாங்கம், மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எம்எஸ்.பாண்டியன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏமாற்றம் அடைந்தனர்.

மதுரை மாவட்டத்தில் அறிவிக்கப்பட்ட 8 வேட்பாளர்களில் உசிலம்பட்டி தொகுதிக்கு அறிவித்த அய்யப்பனை தவிர மற்றவர்கள் ஏற்கனவே எம்பி, எம்எல்ஏக்களாக பதவி வகித்தவர்கள். புதியவர்களுக்கு பெரியளவில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. மதுரை மாநகரில் உள்ள தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு கொடுத்த முன்னாள் மண்டலத் தலைவர் சாலைமுத்து, கிரம்மர் சுரேஷ், வெற்றிவேல், சோலைராஜா உள்ளிட்ட பலருக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்கவில்லை.

கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, விவி.ராஜன் செல்லப்பா ஆகியோர் மாவட்டச் செயலாளர்களாக இருந்தும், தங்கள் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிகளில் தனது ஆதரவாளர்கள் ஒருவருக்கு கூட ‘சீட்’ பெற்றக்கொடுக்க முடியவில்லை.

அதனால், அவரது ஆதரவாளர்கள் அவர்கள் மீது அதிருப்தியடைந்துள்ளனர். அதேநேரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், ஏற்கணவே எம்எல்ஏ-க்களாக உள்ள தனது ஆதரவாளர்கள் எஸ்.எஸ்.சரவணன், பெரியபுள்ளான், மாணிக்கம் ஆகியோருக்கு ‘சீட்’ பெற்றுக்கொடுத்ததுடன், அய்யப்பனுக்கு புதிதாக உசிலம்பட்டி தொகுதிக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவர்களில் எஸ்.எஸ்.சரவணனுக்கு தனது மாவட்டத்தை தாண்டி அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மாவட்டச் செயலாளராக இருக்கும் மதுரை தெற்கிலும், பெரியபுள்ளானுக்கு மதுரை கிழக்கு மாவட்டத்திலும் ‘சீட்’ பெற்றுக் கொடுத்துள்ளார். எனினும், புறநகரில் அவரது ஆதரவாளர்கள் தமிழரசன், இளங்கோவன், உள்ளிட்ட சிலர் ‘சீட்’ கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x