Published : 09 Mar 2021 03:12 AM
Last Updated : 09 Mar 2021 03:12 AM
கும்பகோணம் சங்கர மடத்தில் 52 ஆண்டுகளுக்குப் பிறகு, காஞ்சி சங்கராச்சாரியார் நடத்தும் மகா சிவராத்திரி பூஜை மார்ச் 11-ம் தேதி நடைபெறவுள்ளது.
கடந்த 1969-ம் ஆண்டு காஞ்சிசங்கராச்சாரியார் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் கும்பகோணத்துக்கு வந்தபோது, சங்கர மடத்தில் தங்கியிருந்தார். அப்போது, அங்கு மகா சிவராத்திரி பூஜையை காஞ்சி சங்கராச்சாரியார் நடத்தினார்.
இந்நிலையில், தற்போது கும்பகோணம் சங்கர மடத்தில் தங்கியுள்ள காஞ்சி சங்கராச்சாரியார் ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், மார்ச் 11-ம் தேதி மகா சிவராத்திரியை முன்னிட்டு, அங்கு நான்கு கால பூஜைகளை நடத்த உள்ளார்.
காஞ்சி காமகோடி பீடாதிபதி ஸ்ரீ விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழா இன்று (மார்ச் 9) நடைபெறுகிறது. இவ்விழாவை முன்னிட்டு, கும்பகோணம் சங்கர மடத்தில் காலை, மாலை வேத பாராயணம், நாம சங்கீர்த்தனம், சத்சங்கம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
மேலும், இன்று காலை ஏகாதசி ருத்ர ஜப ஹோமம், ஆயுஷ்ய ஹோமம், வசோதாரா ஹோமம் நடத்தப்பட்டு, சுவாமிகளுக்கு மகாபிஷேகமும், மாலை 4.30மணியளவில் ரெட்டிராயர் குளம் கீழ்கரையில் உள்ள ஸ்ரீ ராமமந்திரத்தில் ஆச்சார்ய சுவாமிகளுக்கு 108 தங்கக் காசுகளால் ஸ்வர்ண பாத பூஜை, புஷ்பாஞ்சலியும் நடைபெற உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை சங்கர மடம் கைங்கர்ய சபாவினர் செய்து வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT