Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM

தமிழகத்தில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற அவசியமில்லை: இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்குமாற்ற அவசியம் இல்லை என்று கூறியுள்ள உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட இடையீட்டு மனுக்களை முடித்து வைத்து உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கல்வி, வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 69 சதவீத இடஒதுக்கீடு சட்டரீதியாக வழங்கப்பட்டு வருகிறது. தற்போது நடைமுறையில் உள்ள இந்த 69 சதவீதஇடஒதுக்கீட்டை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை, மகாராஷ்டிர மாநில இடஒதுக்கீடு தொடர்பாக அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள வழக்கோடு சேர்த்து விசாரிக்கக் கோரிதமிழகத்தைச் சேர்ந்த காயத்ரி, தினேஷ், பார்த்தசாரதி உள்ளிட்டபலர் உச்ச நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீதான விசாரணை நீதிபதிகள் அசோக் பூஷண், ஆர்.சுபாஷ் ரெட்டி ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று நடந்தது.

மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் மனீந்தர் சிங், மீனாட்சி அரோரா, கபில் சிபல் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். ‘‘இடஒதுக்கீடு என்பது 50 சதவீதத்துக்கு அதிகமாக இருக்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது. அந்த நடைமுறையை மத்திய அரசு பின்பற்றி வருகிறது. ஆனால், தமிழகத்தில் நடைமுறையில் உள்ள69 சதவீத இடஒதுக்கீடு என்பது உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிரானது. தற்போது அதிலும், வன்னியர் சமூகத்துக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க தற்காலிக சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பரில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் தனியாக கமிட்டி அமைக்கப்பட்டுள்ள நிலையில் வன்னியர் சமூகத்துக்கான உள்ஒதுக்கீடு என்பது ஏற்புடையதல்ல. ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வில் நிலுவையில் உள்ள மகாராஷ்டிர மாநிலத்தின் மராத்தா இடஒதுக்கீடு வழக்குடன் இந்த வழக்கின் சாராம்சமும் ஒருமித்துப் போகிறது. அதனால், இந்த வழக்கையும் அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றி, மராத்தா வழக்குடன் சேர்த்து விசாரிக்க உத்தரவிட வேண்டும்’’ என வாதிட்டனர்.

இதற்கு, தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் முகுல் ரோஹத்கி, சேகர் நாப்தே ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர். ‘‘தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீடு வழக்கையும், மராத்தா இடஒதுக்கீடு வழக்கையும் எந்த வகையிலும் ஒப்பிட முடியாது. ஒப்பிடவும் கூடாது. ஏனெனில், தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு அரசியலமைப்பு சாசனத்தின் பிரிவு 9-ன் கீழ் சட்ட ரீதியிலான பாதுகாப்பு உள்ளது. எனவே, இந்த வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றக்கூடாது. மேலும், தமிழகத்தில் பேரவைத் தேர்தல் நடக்கவுள்ள நிலையில் இந்த வழக்கை தற்போது விசாரிக்க வேண்டிய அவசியமில்லை’’ என அவர்கள் வாதிட்டனர்.

அதையடுத்து நீதிபதிகள், ‘‘தமிழகத்தில் நடைமுறையில் உள்ள 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான இந்த வழக்குகளை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டிய தேவையில்லை. அரசியல் சாசன அமர்வில் விசாரிக்கப்பட்டு வரும் மராத்தா இடஒதுக்கீடு வழக்குமுடிந்த பின்னரே தமிழக இடஒதுக்கீடு தொடர்பான வழக்கு விசாரிக்கப்படும்’’ என்று கூறி, 69 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட இடையீட்டு மனுக்கள் அனைத்தை யும் முடித்து வைத்து உத்தர விட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x