Published : 04 Mar 2021 05:52 AM
Last Updated : 04 Mar 2021 05:52 AM
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியைச் சேர்ந்தவர் ரவீந்திரன். திருப்பூர் மாவட்டம் கொமரலிங்கம் மேற்கு கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்திக். இவர்கள் இருவரும் சென்னை பெருநகர காவல் ஆயுதப்படையில் பணிபுரிந்து வந்தனர்.
காவலர்கள் இருவரும் கடந்த ஜன.19-ம் தேதி அதிகாலை ஆவடியில் இருந்து கோயம்பேடு பேருந்து முனைய பாதுகாப்பு பணிக்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அம்பத்தூர் எஸ்டேட் ரோடு சந்திப்பில், இவர்களது வாகனம் மீது கார் மோதியதில் இருவரும் உயிரிழந்தனர்.
இறந்த காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்குவதற்காக சென்னை பெருநகரில் பணிபுரியும் போலீஸார் ரூ.28 லட்சம் நிதி திரட்டினர். இதில் இருவரின் குடும்பங்களுக்கும் தலா ரூ.14 லட்சம் வழங்கப்பட்டது. அதற்கான காசோலைகளை ரவீந்திரனின் மனைவி இலக்கியா, கார்த்திக்கின் மனைவி விஜயலட்சுமி ஆகியோரிடம் மாநகர காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் நேற்று வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கூடுதல் ஆணையர் (தலைமையிடம்) ஏ.அமல்ராஜ், இணை ஆணையர் எஸ்.மல்லிகா, ஆயுதப்படை துணை ஆணையர் சவுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT