Published : 01 Mar 2021 03:17 AM
Last Updated : 01 Mar 2021 03:17 AM

சட்டப்பேரவை தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை: வணிகர் சங்க பேரவை தலைவர் தகவல்

மறைமலைநகர்

காட்டாங்கொளத்தூரில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்துகொண்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் சட்டமன்ற தேர்தலில் யாருக்கும் ஆதரவில்லை என தெரிவித்தார்.

தாம்பரம் அடுத்த காட்டாங்கொளத்தூர் காந்தாளி அம்மன் கோயில் தெருவில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவையின் கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக அதன் தலைவர் வெள்ளையன் கலந்துகொண்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலையை அரசியல் கட்சித் தலைவர்கள் குறைக்க முயற்சிக்க வேண்டும்; சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும்; ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். நகராட்சி நிர்வாகத்தில் உள்ள கடைகளில் அதிக வாடகை வசூலிக்கப்படுகிறது. இதனால் வியாபாரிகள் பாதிக்கப்படுகின்றனர். வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகிறார்கள். ஆளும் வர்க்கத்தின் செவியை இந்த போராட்டம் எட்டியதாக தெரியவில்லை. சாமானிய மக்கள் தங்கள் தேவைகளை போராடித்தான் பெற வேண்டும் என்ற நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

வருகின்ற சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை. வியாபாரிகள், விவசாயிகள், சிறு உற்பத்தியாளர்களுக்கு எதிராக எந்த கட்சி செயல்பட்டாலும் அதை தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை எதிர்க்கும். பெட்ரோல், டீசல் விலையை குறைக்கவில்லை என்றால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த பெட்ரோல், டீசல் விலையை குறைக்க முயற்சிக்க வேண்டும்; சுங்கவரியை ரத்து செய்ய வேண்டும்; ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x