Last Updated : 26 Feb, 2021 06:44 PM

 

Published : 26 Feb 2021 06:44 PM
Last Updated : 26 Feb 2021 06:44 PM

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: நடிகர் ரஜினியிடம் நிச்சயம் விசாரணை நடத்தப்படும்- ஒருநபர் ஆணைய வழக்கறிஞர் பேட்டி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினியிடம் நிச்சயம் விசாரணை நடத்தப்படும் என்று ஒருநபர் ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் இன்று தெரிவித்தார்.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு, தடியடி மற்றும் தொடர்ந்து நடந்த சம்பவங்களில் 13 பேர் பலியானார்கள்.

இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை தமிழக அரசு அமைத்தது.

இந்த ஆணையத்தின் நீதிபதி மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார். அதன்படி ஏற்கனவே 24 கட்ட விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 25-வது கட்ட விசாரணை தூத்துக்குடி கடற்கரை சாலை விருந்தினர் மாளிகையில் உள்ள முகாம் அலுவலகத்தில் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் கடந்த 22-ம் தேதி முதல் இன்று வரை நடைபெற்றது.

இதில் வாகனங்கள் எரிக்கப்பட்டதாக புகார் தெரிவித்த அரசு ஊழியர்கள் மற்றும் சம்பவத்தில் காயமடைந்த போலீஸாருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் உள்ளிட்ட 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 26 பேர் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர்.

இது குறித்து ஒருநபர் விசாரணை ஆணையத்தின் வழக்கறிஞர் அருள்வடிவேல் சேகர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஒருநபர் விசாரணை ஆணையத்தின் 25-வது கட்ட விசாரணையில் 33 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 26 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

இதுவரை 943 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அதில் 640 பேரிடம் விசாரணை நடத்தி உள்ளோம். 1089 ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இன்னும் சுமார் 400 பேர் வரை விசாரணை நடத்தப்படவுள்ளது. அடுத்த கட்ட விசாரணையில் காயம் அடைந்த போலீசாரிடம் விசாரணை நடத்தவுள்ளோம். அவர்கள் 100 பேருக்கு அதிகமாக உள்ளனர்.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ தனியாக விசாரணை நடத்தி வருகிறது. அவர்கள் முதலில் கலவரத்தின் போது தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டதாக 27 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தனர்.

அவர்களிடம் ஏற்கனவே விசாரித்துள்ளோம். தற்போது சிபிஐ கூடுதலாக 44 பேரை குற்றப்பத்திரிக்கையில் சேர்த்துள்ளது. அவர்களிடமும் விசாரணை நடத்தவுள்ளோம். அதன்பிறகு காயம் அடைந்த போலீசார், ஸ்டெர்லைட் குடியிருப்பில் இருந்தவர்கள், உயர் அதிகாரிகளிடம் விசாரணை

நடிகர் ரஜினிக்கு ஏற்கெனவே சம்மன் அனுப்பப்பட்டது. அப்போது அவர் கானொலி காட்சி மூலம் விசாரணை நடத்த முடியுமா என்று கேட்டிருந்தார். அதற்கான சாத்தியக்கூறுகள் மிகவும் குறைவு என்று அவரது வழக்கறிஞரிடம் ஏற்கெனவே கூறியுள்ளோம்.

அவர் இங்கு வருவதை விரும்புகிறோம். ஒருவேளை வர முடியாத நிலை ஏற்பட்டால், சென்னையில் வைத்து விசாரணை நடத்தலாம் என்று தெரிவித்துள்ளோம். அது பற்றி இதுவரை அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை. கண்டிப்பாக அவரை விசாரிப்போம் என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x