Published : 01 Jun 2014 09:47 AM
Last Updated : 01 Jun 2014 09:47 AM

தொடங்கியது புதிய மீன்பிடிக் காலம்: விரைவில் மூன்றாம்கட்டப் பேச்சுவார்த்தை?

45 நாட்கள் மீன்பிடித் தடைக் காலம் முடிந்த பின்னர் ராமேஸ்வரம் மீனவர்கள் சனிக்கிழமை கடலுக்குச் சென்றனர்.

தமிழகத்தின் கிழக்குக் கடற்கரைப் பகுதிகளில் கடந்த ஏப்ரல் 15-ம் தேதியில் இருந்து மே 29-ம் தேதி வரை மீன்பிடித் தடைக் காலம் அமலில் இருந்தது. இதனால் ராமேஸ்வரம் மற்றும் கடற்கரையோரங்களில் 1000-க்கும் மேற்பட்ட விசைப் படகுகள் கடலுக்குச் செல்லாமல் நிறுத்தப்பட்டிருந்தன.

இந்நிலையில் கடந்த மே 12-ம் தேதி கொழும்பில் நடைபெற்ற இரண்டாம்கட்ட பேச்சு வார்த்தையின்போது தமிழக விசைப் படகு மீனவர்கள் தடை செய்யப்பட்ட வாருதல் (trawling) மீன்பிடி மற்றும் இரட்டைமடி போன்ற மீன்பிடிமுறைகளை பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிப்பதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும் என இலங்கை மீனவப் பிரதிநிதிகளால் வலியுறுத்தப்பட்டது.

ஆனால், இந்த மீன்பிடி முறையை மாற்றிக்கொள்ள 3 வருட காலம் அவகாசம் வேண்டும் எனவும், அதற்கு பதிலாக இலங்கை கடற்பரப்பில் ஆண்டுக்கு 120 நாட்களுக்கு தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கு பதிலாக 90 நாட்களாக குறைத்துக் கொள்கிறோம் என தமிழக மீனவர்கள் கோரிக்கையை முன்வைத்தனர். ஆனால், இலங்கை பிரதிநிதிகள் இதனை ஏற்க மறுத்துவிட்டனர்.

மேலும் இலங்கையில் 30 ஆண்டுகால உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட மீனவர்களின் கடல் வளத்தை தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து அழித்து வருவதாகவும் குற்றம் சாட்டினர்.

அதே சமயம் பாரம்பரியமாக இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடித்து வந்த கடற்பரப்பில், தாங்கள் தொழில் செய்யும் உரிமையை இலங்கை மீனவர்கள் மறுக்கக் கூடாது எனவும் தமிழக மீனவர்கள் வாதிட்டனர். இறுதியில் பேச்சுவார்த்தை சுமுக உடன்பாடு ஏற்படாமலேயே முடி வடைந்தது.

நரேந்திர மோடி தற்போது பிரதமராக பதவியேற்றுள்ள சூழலில், விரைவில் மூன்றாம் கட்டப் பேச்சுவார்த்தை நடைபெறும் என்ற நம்பிக்கையுடன் உள்ளார்கள் தமிழக மீனவர்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x