Published : 23 Feb 2021 01:44 PM
Last Updated : 23 Feb 2021 01:44 PM

யானைகள் சித்திரவதை; தனியார், கோயில்களில் யானைகள் வளர்ப்பைத் தடுக்க கொள்கை முடிவு: உயர் நீதிமன்றம் பரிந்துரை

சென்னை

யானைகள் சித்திரவதை செய்யப்படுவது அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்த நீதிபதிகள், தனியாரால் வளர்க்கப்படும் யானைகளைக் கண்காணிக்க வேண்டும் எனவும், யானைகள் பராமரிப்பு குறித்த விதிமுறைகளை வகுத்து எட்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

திருச்சி ஸ்ரீரங்கத்தில் உள்ள ஆண்டாள் மற்றும் லட்சுமி ஆகிய யானைகளை அதன் பாகன்களான ஸ்ரீதரன் மற்றும் வெங்கடேசன் ஆகியோர் பல ஆண்டுகளாகப் பராமரித்து வந்தனர். இந்நிலையில், முறையான காரணங்கள் இல்லாமல் பாகன்கள் இருவரும் வெளியேற்றப்பட்டதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் வழக்குத் தொடர்ந்துள்ளார்.

மேலும், யானைகளைப் பராமரிக்க கொள்ளிடம் ஆற்றங்கரையில் 10 ஏக்கர் நிலத்தை ஒதுக்க வேண்டுமெனவும் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், “முறையான காரணங்கள் இல்லாமல் பாகன்களை மாற்றியதால் யானைகளின் உடல்நிலை பாதிக்கப்படுகிறது. எனவே, பாதிக்கப்பட்ட யானைகளைக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தார்.

இதனைக் கேட்ட தலைமை நீதிபதி, சமீபகாலமாக யானைகள் சித்திரவதை செய்யப்படுவது அதிகரித்து வருவதாக வருத்தம் தெரிவித்தார். மேலும், மேட்டுப்பாளையம் முகாமில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோயில் யானைகள் சித்திரவதை செய்யப்பட்ட சம்பவத்தைச் சுட்டிக்காட்டிய தலைமை நீதிபதி, இதுபோன்று யானைகளைச் சித்திரவதை செய்யும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், அவர்களிடம் கருணை காட்டக் கூடாது எனக் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

விலங்குகளிடம் கருணை காட்டாத ஒருவனுக்கு நாமும் கருணை காட்டக் கூடாது எனத் தெரிவித்த நீதிபதிகள், தனியாரால் வளர்க்கப்படும் யானைகளைக் கண்காணிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.

தமிழகத்தில் தனியார் மற்றும் கோயில்களில் யானைகள் வளர்க்கப்படுவதைத் தடுக்கும் வகையில் கொள்கை முடிவெடுக்க வேண்டுமென அரசுக்குப் பரிந்துரைத்தனர். மேலும், யானைகள் பராமரிப்பு குறித்த விதிமுறைகளை வகுத்து எட்டு வாரத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x