Published : 18 Feb 2021 03:18 AM
Last Updated : 18 Feb 2021 03:18 AM

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் குடும்ப, தனியார் நிறுவன கட்சிகளை மக்கள் புறக்கணிப்பார்கள்: மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி கருத்து

கோவையில் வரும் 25-ம் தேதி பிரதமர் மோடி கலந்துகொள்ளும் பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கான பூமி பூஜை நிகழ்ச்சி, அவிநாசி சாலையில் உள்ள கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற பாஜக நிர்வாகிகள் கூட்டத்தில் மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி பேசியதாவது:

தென்னிந்தியாவில் பாஜக அதிக கவனம் செலுத்தி வருகிறது.தமிழகத்தில் ஏற்கெனவே பாஜகவில் நிறைய பேர் இணைந்துள்ளனர். இனி இந்தியாவில் காங்கிரஸுக்கு எதிர்காலம் இல்லை. அதேபோல, குடும்பக் கட்சிகளுக்கும் எதிர்காலம் இல்லை. பிஹார், உத்தரப் பிரதேசம், ஹரியானா, ஜம்மு-காஷ்மீர், ஆந்திரா, கர்நாடாக மாநிலங்களில் குடும்பக் கட்சிகளை மக்கள் புறக்கணித்துள்ளனர்.

அதேபோல, தமிழகத்திலும் வரும் சட்டப்பேரவை தேர்தலில் குடும்ப, தனியார் நிறுவன கட்சிகளை (‘ஃபேமிலி, பிரைவேட் லிமிடெட்) மக்கள் புறக்கணிப்பார்கள்" என்றார்.

பெட்ரோல், டீசல் விலை குறையும்

பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் பேசும்போது, "மேற்கு மண்டலம் பாஜகவின் கோட்டையாக உள்ளது. பிரதமரின் கோவை வருகை தமிழக அரசியலில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்" என்றார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் கூறும்போது, "பெட்ரோல், டீசல் விலை உயர்வு எங்களின் வாக்கு சதவீதத்தை பாதிக்காது. இந்த விலை உயர்வு தற்காலிகமானது. கூடியவிரைவில் விலை கட்டுப்பாட்டுக்குள் வரும். மாநில அரசுகள் வரிகளைக் குறைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டிருக்கிறோம். பூரண மதுவிலக்கு என்பது பாஜகவின் அடிப்படைக் கொள்கை. அதை நாங்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தேவேந்திர குல வேளாளர்களின் பட்டியலின வெளியேற்றம் என்ற கோரிக்கை அரசின் பரீசிலனையில் இருக்கிறது"என்றார்.

இந்த நிகழ்ச்சியில், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை இணை அமைச்சர் வி.கே.சிங், பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், மாநிலத் துணைத் தலைவர் அண்ணாமலை, பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், மாவட்டத் தலைவர் நந்தகுமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x