புதுச்சேரியில் கரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு: புதிதாக 18 பேர் பாதிப்பு
புதுச்சேரியில் புதிதாக 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 2 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.
இதுகுறித்துப் புதுச்சேரி சுகாதாரத் துறைச் செயலாளர் அருண் இன்று (பிப். 17) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 1,958 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 12 பேருக்கும், காரைக்காலில் ஒருவருக்கும், மாஹேவில் 5 பேருக்கும் என மொத்தம் 18 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும், புதுச்சேரி வேல்ராம்பட்டு மறைமலை நகர் பகுதியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஜிப்மரிலும், காரைக்கால் எம்எம்ஜி நகரைச் சேர்ந்த 67 வயது முதியவர் காரைக்கால் அரசு மருத்துவமனையிலும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 660 ஆக அதிகரித்துள்ளது. இறப்பு விகிதம் 1.67 சதவீதமாக உள்ளது.
புதுச்சேரி மாநிலத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 39 ஆயிரத்து 506 ஆக உயர்ந்துள்ளது. இதில், மருத்துவமனைகளில் 106 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 96 பேரும் என 202 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 27 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளதால், வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 644 (97.82) ஆக உள்ளது.
இதுவரை 6 லட்சத்து 11 ஆயிரத்து 825 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில், 5 லட்சத்து 68 ஆயிரத்து 3 பரிசோதனைகளுக்குத் தொற்று இல்லை என முடிவு வந்துள்ளது.
மேலும், 6,272 சுகாதாரப் பணியாளர்கள், 352 முன்களப் பணியாளர்கள் என 6,624 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
