Last Updated : 14 Feb, 2021 03:17 AM

 

Published : 14 Feb 2021 03:17 AM
Last Updated : 14 Feb 2021 03:17 AM

தேர்தல் பிரச்சார களமாக மாறும் எருது விடும் விழாக்கள்

சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் நடைபெறும் உள்ளுர் விழாக்கள் மற்றும் எருதாட்டம் உள்ளிட்ட போட்டிகளுக்கு பரிசுகளை அள்ளிக்கொடுத்து, விழா மேடையில் தங்களது கட்சியைப் பற்றி பிரச்சாரம் செய்ய அரசியல் பிரமுகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கிருஷ்ணகிரி, வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் பொங்கல் விழாவினைத் தொடர்ந்து கிராமங்களில் எருதுவிடும் விழா, எருதாட்டம் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் எருதுவிடும் விழாவின்போது குறிப்பிட்ட தூரத்தை குறைந்த நேரத்தில் கடக்கும் காளைகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்படுகிறது.

சில பகுதிகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளில், காளையின் கொம்பில் பரிசுத்தொகை கட்டப்பட்டு அதனைப் பறிக்கும் இளைஞர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. இப்போட்டியில் பங்கேற்கும் காளைகளுக்கும் ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும்.

இதற்காக விழாக் குழுவினர் உள்ளூர் முக்கியஸ்தர்கள், கட்சிப் பிரமுகர்களிடம் நன்கொடை வசூலிப்பர். வழக்கமாக எருதுவிடும் விழாக்களுக்கு நன்கொடை வழங்குவதில் அரசியல் கட்சிப் பிரமுகர்கள் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.

ஆனால், தற்போது சட்டப்பேரவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், எருதுவிடும்விழாவைக் காண உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வருவதால், அவர்களிடம் எளிதாக அறிமுகம் செய்து கொள்ளவும், விழாவில் பேசவும் கிடைக்கும் அரிய வாய்ப்பாக இத்தகைய விழாக்களை அரசியல் பிரமுகர்கள் பயன்படுத்திக் கொள்ளத் தொடங்கியுள்ளனர்.

கோயில் விழாக்களிலும்..

அரசியல் கட்சியினர், விழாக்களுக்கு பரிசுகளை தாராளமாக அள்ளிவழங்கி, விழா மேடைகளை தேர்தல்பிரச்சார களமாகவும் மாற்றி வருகின்றனர். காளைகளின் கொம்பில் கட்சிக்கொடிகளை கட்டி ஓட விட்டு நூதன பிரச்சாரத்திலும் ஈடுபடுகின்றனர். இதேபோல் உள்ளுர் கோயில் கும்பாபிஷேகம், சிறு, சிறு கோயில் விழாக்களிலும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று ஆதரவு திரட்டி வருகின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x