Published : 12 Feb 2021 10:39 AM
Last Updated : 12 Feb 2021 10:39 AM

பண விவகாரத்தில் போலீஸ் வழக்குப் பதிவு; இயக்குநர் சக்தி சிதம்பரம் முன்ஜாமீன் கோரி வழக்கு: உயர் நீதிமன்றம் ஒத்திவைப்பு

கடனாகப் பெற்ற பணத்தை இயக்குநர் சக்தி சிதம்பரத்திடம் திரும்பக் கேட்டபோது கடன் கொடுத்த நபரை அவர் மிரட்டியதாக விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சக்தி சிதம்பரம் தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

பிரபல தமிழ்த் திரைப்பட இயக்குநர் சக்தி சிதம்பரம், சினிமா பாரடைஸ் என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனத்தை நடத்தி வருகிறார். கடந்த 2010-ம் ஆண்டு நடிகர் விஜய் நடித்து வெளியான 'காவலன்' திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையைப் பெறுவதற்காக, சென்னை அடையாற்றைச் சேர்ந்த சுந்தர் என்பவரிடம் 23 லட்சம் ரூபாய் கடனாகப் பெற்றுள்ளார்.

ஒரு லட்சம் ரூபாய் வட்டி சேர்த்து 24 லட்சம் ரூபாயாக மூன்று மாதங்களில் திருப்பித் தந்து விடுவதாக உறுதி அளித்தும், சக்தி சிதம்பரம் பணத்தைத் திருப்பி தரவில்லை என்றும், பணத்தைத் திருப்பிக் கேட்டபோது, தனக்கும் குடும்பத்தினருக்கும் மிரட்டல் விடுத்ததாகக் கூறி, விருகம்பாக்கம் போலீஸில் சுந்தர் புகார் அளித்திருந்தார்.

பின் உயர் நீதிமன்ற உத்தரவின்படி, இந்தப் புகாரின் அடிப்படையில், இயக்குநர் சக்தி சிதம்பரம் மீது விருகம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கில் தன்னைக் காவல் துறையினர் கைது செய்யக்கூடும் எனக் கருதி, முன்ஜாமீன் கோரி சக்தி சிதம்பரம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பாரதிதாசன் முன் நேற்று விசாரணைக்கு வந்தபோது, வாங்கிய பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்டதாக சக்தி சிதம்பரம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, இந்த முன்ஜாமீன் வழக்கில் ஆட்சேபம் தெரிவிக்கத் தன்னையும் இணைக்கக் கோரி மனுத்தாக்கல் செய்ய உள்ளதால், அவகாசம் வழங்க வேண்டும் எனப் புகார்தாரர் சுந்தர் தரப்பில் கோரப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதி, மனு மீதான விசாரணையை பிப்ரவரி 24-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x