Published : 11 Feb 2021 08:58 PM
Last Updated : 11 Feb 2021 08:58 PM

நாங்கள் நடுரோட்டில் நிற்கவில்லை; எங்களுக்கு டிடிவி தினகரன் பதவிகள் வழங்கி அழகுபார்க்கிறார்: முதல்வருக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் பதில்

மதுரை

‘‘நாங்கள் நடுரோட்டில் நிற்கவில்லை, எங்களுக்கு பதவிகள் வழங்கி டிடிவி.தினகரன் அழகுப்பார்க்கிறார், ’’ என்று முதலமைச்சர் கே.பழனிசாமிக்கு தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏ-க்கள் பதில் அளித்தனர்.

முன்னதாக, முதல்வர் கே.பழனிசாமி, டிடிவி.தினகரனை நம்பிச் சென்ற 8 எம்எல்ஏ-க்களை டிடிவி.தினகரன் நடுரோட்டில் விட்டுச் சென்றதாகவும், அவரை நம்பி மீண்டும் செல்பவர்களுக்கு அதே நிலைதான் ஏற்படும் என்று கூறியிருந்தார்.

அவருக்குப் பதில் அளிக்கும் வகையில் மதுரையில் தகுதி நீக்கம்செய்யப்பட்ட சட்ப்பேரவை உறுப்பினர்கள் மாரியப்பன் கென்னடி, கதிர்காமு, முத்தையா, தங்கத்துரை ஆகியோர் ஆகியோர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

அப்போது அவர்கள் கூறியதாவது:

18 சட்டமன்ற உறுப்பினர்கள் டிடிவி. தினகரனை நம்பி போனதால் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்கள் எனக் கூறுவது தவறானது. ஓ.பன்னீர்செல்வம் எதிர்த்தபோது அதிமுக ஆட்சியை உருவாக்க அனைவரையும் ஒன்றிணைத்து இந்த ஆட்சியை உருவாக்கியவர் டிடிவி தினகரனும், சசிகலாவும்தான்.

நாங்கள் அரசை கலைக்க வேண்டும் என ஒதுபோதும் செயல்படவில்லை. முதல்வரை மாற்ற வேண்டும் என்று தான் எதிர்த்தோம். நாங்கள் டிடிவி.தினகரனை நம்பிச் சென்றதால் நடுரோட்டில் நிற்கவில்லை. எங்களை டிடிவி தினகரன் உயர்பதவி வழங்கி அழகுபார்க்கிறார். நாங்கள்தான் கே.பழனிசாமியை முதல்வராகத் தேர்வு செய்தோம். ஆனால், அவரோ எங்களை தகுதிநீக்கம் செய்ய வைத்துவிட்டார்.

அதை மறைத்து, பொதுமக்கள் மத்தியில் அவர் தவறான தகவல்களைக் கூறுகிறார். மனசாட்சியை அடமானம் வைத்துப் பேசிவருகிறார். வரும் தேர்தலில் அவருக்கு மக்கள் தக்க பதிலடி தருவார்கள். தன்னிடம் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களை தக்க வைப்பதற்காக டிடிவி தினகரன் மீது பழி சுமத்துகிறார் முதல்வர்.

ஜெயக்குமார், சி.வி.சண்முகம் மட்டும்தான் தான் சசிகலாவையும் டிடிவி தினகரனையும் எதிர்க்கின்றனர். சிவி.சண்முகத்திற்கு மாவட்ட செயலாளர் பதவியும், ஜெயக்குமாருக்கு நிதி அமைச்சர் பதவியும், கே.பழனிசாமிக்கு முதல்வர் பதவியும் அளித்தவர் சசிகலா.

ஆனால், அவரோ சசிகலாவிற்கு துரோகம் செய்துவிட்டார். ஆட்சியை ஒப்படைத்த சசிகலாவிற்கும், ஆதரவளித்த 18 எம்.எல்.ஏக்களுக்கும் உண்மையாக இல்லாத முதல்வர் கே.பழனிசாமி தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x