Last Updated : 11 Feb, 2021 03:13 AM

 

Published : 11 Feb 2021 03:13 AM
Last Updated : 11 Feb 2021 03:13 AM

பல மாவட்டங்களிலிருந்து ஆர்டர்: அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கும் பணி விறுவிறுப்பு

தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தை தொடங்கிவிட்டன. இதைத்தொடர்ந்து கட்சிக் கொடிகள் தயாரிப்புப் பணி கோவையில் தீவிரமடைந்துள்ளது.

கோவையில் டவுன்ஹால், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட இடங்களில் கொடிகள் தயாரிப்புப் பணி நடக்கிறது.

டவுன்ஹால் பகுதியில் உள்ள ஒரு விற்பனையகத்தில், கொடிகள் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராஜேந்திரன் என்பவர் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறியதாவது : காட்டன், மைக்ரோ கிளாத், வெல்வெட், பாலியஸ்டர் ஆகிய துணி வகைகளைக் கொண்டு, 8-க்கு 10 அங்குலம் முதல் 40-க்கு 60 அங்குலம் வரை பல்வேறு அளவுகளில் கொடிகள் தயாரிக்கிறோம். திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், அமமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட அனைத்து அரசியல் கட்சிகளின் கொடிகளும் இங்கு தயாரிக்கப்படுகின்றன. இதில் சராசரி அளவான 20-க்கு 30 அங்குலம் அளவுள்ள கொடியைத் தான் அதிகளவில் ஆர்டர் கொடுத்து வாங்குகின்றனர்.

மொத்தமாக துணி வாங்கி, அரசியல் கட்சியின் கொடியை வடிவமைத்து, துணியில் அச்சேற்றுகிறோம். பின்னர், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள தையல் தொழிலாளர்களுக்கு சுழற்சி முறையில் கொடுக்கிறோம். அவர்கள் அக்கொடிகளுக்கு ஓரம் அடித்து, கட்டுவதற்கு ஏற்ப காது பகுதிகளை வைத்து தைத்து எங்களிடம் ஒப்படைக்கின்றனர். கோவை மட்டுமின்றி, திருச்சி, நாமக்கல், சேலம், கரூர், மதுரை, ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரியில் இருந்தும் ஆர்டர் கொடுத்து, கொடியை பெற்றுச் செல்கின்றனர்.

ஒரு நாளைக்கு சராசரியாக 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் கொடிகளை தயாரிக்கிறோம். தற்போது வரை ஏறத்தாழ 50 ஆயிரத்துக்கும் அதிகமான கொடிகளை தயாரித்து வைத்துள்ளோம். கரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவித்தவர்களுக்கு, கட்சிக் கொடிகள் தயாரிப்புப் பணி கைகொடுத்து உதவுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x