Published : 10 Feb 2021 10:27 AM
Last Updated : 10 Feb 2021 10:27 AM

கனிமொழிக்குக் கண்ணில் கோளாறு- முதல்வர் பழனிசாமி | நீங்கள் தமிழ்நாட்டுக்கே கோளாறு- கனிமொழி

மதுரை

சசிகலா காலில் விழுந்து பதவி ஏற்ற முதல்வர் பழனிசாமி அவருக்கே துரோகம் செய்தவர். தொடர்ந்து தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் துரோகம் செய்து வருகிறார் என கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரக் களம் சூடுபிடித்துள்ளது. திமுக சார்பில் அதன் தலைவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றனர். திமுக மகளிரணிச் செயலாளர் கனிமொழி, மதுரையில் நேற்றிரவு தனது இரண்டாம் நாள் பிரச்சாரத்தின் இறுதி நிகழ்ச்சியாக மதுரை முனிச்சாலை பகுதியில் வாகனப் பிரச்சாரம் செய்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

''திமுக தலைவர் ஸ்டாலின் பிரச்சாரத்தின்போது மக்களிடம் கேட்கும் 'நான் ரெடி நீங்க ரெடியா' என்ற கேள்விக்கு, மக்கள் அளிக்கும் ஆதரவு தமிழகம் தயாராக இருப்பதைத் தெளிவாகப் புரிந்துகொள்ள முடிகிறது. மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டிய பின்னர் அடுத்த கல் தற்போது வரையில் நாட்டியுள்ளனரா? அடிக்கல் நாயகன்தான் தமிழக முதல்வர்.

தமிழக அரசின் திட்டங்கள் கண்ணில் தெரியவில்லை என்றால், கனிமொழிக்குக் கண்ணில் கோளாறு என்று கூறுகிறார் முதல்வர். கண்ணில் கோளாறு என்றால் சரிசெய்து விடலாம். ஆனால், நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு.

வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை. இதனால் சில காலங்களில் ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைக்காமலேயே போய்விடும். தமிழகத்தில் சுயமரியாதை அற்ற ஆட்சி நடைபெற்று வருகிறது. மொழியை அழிப்பதோடு, தமிழர்களின் பெருமையையும் மறைக்கும் விதமாக கீழடி அகழ்வாராய்ச்சி நடக்கவிடாமல் தடுத்தனர்.

ஆதிச்சநல்லூரில் நடைபெற்ற அகழ்வாராய்ச்சியின் அறிக்கையையும் வெளியிட மறுக்கின்றனர். ஜல்லிக்கட்டுப் போட்டியில் தங்கக் காசை முதல்வர் பரிசாக வழங்கினர், தங்கமா? தகரமா? என்று உரசியதற்குப் பின்னர்தான் தெரியவந்துள்ளது. தங்கக் காசு வழங்கியவரைப் போலவே காசும் தகரம் என்று தெரியவந்துள்ளது.

முதல்வர் பழனிசாமி யார் காலில் விழுந்து பதவி ஏற்றாரோ அவர்களுக்கு துரோகம் செய்தவர். தொடர்ந்து தமிழக மக்களுக்கும், இளைஞர்களுக்கும் துரோகம் செய்து வருகின்றார். ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் என்று கேள்வி எழுப்பிய ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வர் ஆனதும் என்ன செய்தார்? தமிழகத்தை மீட்டெடுக்கும் நாள் வந்து கொண்டிருக்கிறது. அதிமுக ஆட்சியை நிராகரிப்போம்''.

இவ்வாறு கனிமொழி பேசினார்.

முன்னதாக, அதிமுக அரசின் திட்டங்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தில் கனிமொழி விமர்சித்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக முதல்வர் பழனிசாமி, அதிமுக அரசால் நிறைவேற்றப்பட்ட திட்டங்களைப் பட்டியலிட்டதுடன் கனிமொழிக்குக் கண்ணில் கோளாறு என்று விமர்சித்தார். இந்நிலையில் கண்ணில் கோளாறு என்றால் சரிசெய்து விடலாம். ஆனால், நீங்கள் தமிழ்நாட்டிற்கே கோளாறு என்று கனிமொழி விமர்சித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x