Last Updated : 12 Nov, 2015 06:50 PM

 

Published : 12 Nov 2015 06:50 PM
Last Updated : 12 Nov 2015 06:50 PM

வெள்ள நிவாரணப் பணிகள்: கடலூர் மக்கள் கடும் அதிருப்தி

கடலூரில் மின்சார விநியோகம் சீரமைப்பு, குடிநீர் வழங்குதல், உணவு வழங்குதல், மேல்நிலைக் குடிநீர் தொட்டிகளுக்கு ஜெனரேட்டர் அமைத்து குடிநீர் ஏற்றும் பணி போன்ற பல்வேறு நிவாரணப் பணிகளை ஆய்வு செய்து பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடிக்க அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ள நிலையில், அங்குள்ள இன்றைய கள நிலவரம் என்னவாக இருக்கிறது என்று பார்க்கலாம்.

மக்கள் குமுறல்... சாலை மறியல்!

கடலூரில் குறிஞ்சிப்பாடி, பூதம்பாடி ஆகிய பகுதிகளில் மீட்புப் பணிகள் முடுக்கிவிடப்பட்டிருந்தாக கூறப்பட்டாலும் மீட்புப் பணிகள் நத்தை வேகத்தில் நடப்பதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மீட்பு, நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த வலியுறுத்தி குறிஞ்சிப்பாடியில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

ஆண்டிக்குப்பம் பகுதியில் குடிநீரின்றி தவிப்பதாக பொதுமக்கள் கூறினர். அதேபோல் பலத்த காற்றில் சாய்ந்த மின் கம்பங்கள் இன்னும் அகற்றப்படவில்லை என்றனர்.

கிராமத்தில் தேங்கி நிற்கும் மழைநீர். | படம்: எஸ்.எஸ்.குமார்

பூதம்பாடியில் தண்ணீர் தேங்கி நிற்கும் பகுதிகளில் பாம்பு போன்ற விஷ உயிரினங்கள் அதிகம் இருப்பதால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருப்பதாக பொதுமக்கள் கூறினர். பூதம்பாடியைச் சேர்ந்த முருகவேல் என்பவர் பாம்பு கடித்து பலியானார்.

வெள்ள நீர் வடிகால் வசதிகளை உடனடியாக செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சுகாதார சீர்கேட்டால் தொற்று நோய் அபாயம்:

கடலூரில் தொற்று நோய் பரவாமல் தடுக்க 37 சிறப்பு மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இந்தக் குழுக்கள் களப் பணியாற்றாமல் ஏதாவது ஓர் இடத்தில் முகாமிட்டு இருப்பதால் தங்களுக்கு தேவையான சிகிச்சை உதவிகளை பெறுவதில் சிக்கல் இருப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

மேலும், தற்காலிக கழிப்பிட வசதிகளை செய்து தராததால் பெரும் சிரமத்துக்குள்ளாகியிருப்பதாக மக்கள் கூறினர். இதனால், தேங்கி நிற்கும் வெள்ள நீரிலேயே கழிவுகள் கலந்து விடுகின்றன. மாசடைந்த நீரால் தொற்று நோய்கள் வேகமாக பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

போதிய தங்கும் இட வசதியும், தற்காலிக கழிப்பிட வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் செய்துதர வேண்டும் என கோருகின்றனர் மக்கள்.

கன மழையால் நெற்பயிர்கள் சேதம் - படம்: எஸ்.எஸ்.குமார்

'வசூல் வேட்டையில் மின் ஊழியர்கள்'

மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் கூறினாலும் சீரமைப்புப் பணிகளில் உள்ளூர் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதையே காணமுடிகிறது.

அதிலும், எந்தப் பகுதியிலிருந்து அதிகளவிலான பணம் கொடுக்கப்படுகிறதோ அங்குதான் மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக பழுது நீக்கும் மேற்கொள்ளும் பணியை மேற்கொள்கின்றனர் என கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். நிலைமையைப் பயன்படுத்தி மின் ஊழியர்கள் சிலர் வசூல் வேட்டையில் ஈடுபட்டுள்ளதாக மக்கள் புகார் தெரிவித்தனர்.

உணவு எப்படி?

நகரப் பகுதிகளில் மூன்று பொது சமையல் கூடங்களும், கிராமப் பகுதிகளில் எட்டு பொது சமையல் கூடங்களும் இயங்கி வருகின்றன. இவற்றில் வழங்கப்படும் உணவு தரமற்று இருப்பதாகவும், உணவகங்களில் போதுமான அளவு குடிநீர் வசதி இல்லை என்றும் மக்கள் வருத்தத்துடன் கூறினர்.

உயிரிழப்பு 32 ஆக அதிகரிப்பு

இதனிடையே, கடலூரில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x