Published : 09 Feb 2021 03:13 AM
Last Updated : 09 Feb 2021 03:13 AM

கல்லூரி மாணவியின் படத்தை ஆபாசமாக சித்தரித்து பதிவிட்டவர் கைது

சென்னை, ராயப்பேட்டையைச் சேர்ந்த 17 வயது மாணவி ஒருவர் ஃபேஷன் தொழில்நுட்பம் படித்து வருகிறார். இவர் தனது படிப்பு சம்பந்தமான தகவல்களை பெறுவதற்காக இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தை பயன்படுத்தி வந்துள்ளார். கடந்த 2020 டிசம்பர் மாதம் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில் யாரோ ஒருவர் மாணவியின் புகைப்படத்தை எடுத்து, வேறு ஒரு ஆபாசமான புகைப்படத்துடன் மாணவியின் முகத்தை மட்டும் இணைத்து மார்ஃபிங் செய்து வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து மாணவியின் பெற்றோர் ராயப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீஸார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மயிலாப்பூர் காவல் மாவட்ட துணை ஆணையரின் சைபர் குற்றப்பிரிவு போலீஸார் உதவியுடன் துப்பு துலக்கப்பட்டது.

தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளத்தில் வெளியிட்டது சேலம் மாவட்டம், அஷ்தம்பட்டியைச் சேர்ந்த பரசுராமன் என்பது தெரிந்தது. அவரை போலீஸார் கைது செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x