Last Updated : 07 Feb, 2021 03:51 PM

 

Published : 07 Feb 2021 03:51 PM
Last Updated : 07 Feb 2021 03:51 PM

புதுச்சேரியில் இந்த முறை நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும்: மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் உறுதி

புதுச்சேரியில் இந்த முறை நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும் என்று மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் உறுதிபட தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் புதுச்சேரி பாஜக தலைமை அலுவலகத்தில் இன்று (பிப். 7 ) செய்தியாளர்களிடம் கூறியதாவது, ‘‘உலகளவில் பொருளாதாரத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக இந்தியா உள்ளது.

நாடு இன்னும் வளர்ச்சிபெற வரிகள் ஏதுமில்லாத அனைத்துப் பிரிவுகளின் வளர்ச்சிக்குத் தேவையான பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ளார்.

நாட்டின் பல பொருளாதார நிபுணர்கள் விடுத்த சவால்களை நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு ஏற்றுக் கொண்டு, ஏழை மக்கள் உள்ளிட்ட அனைத்துப் பிரிவு மக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வழிகளைக் கொண்ட பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளது.

புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தலைமையிலான அரசு, துணைநிலை ஆளுநருடன் மோதுவது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுகிறது.

நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. குறிப்பாக, மக்களுக்கு நேரடியாகச் சென்று சேரும் வகையில், நலத்திட்டங்களின் பயன்கள் மக்களின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைப்பதை செயல்படுத்தி வருகிறோம்.

ஆனால் இதனை நாராயணசாமி எதிர்க்கிறார். இதற்கான நிதியை மாநில அரசுக்கு வழங்க வேண்டுமென நாராயணசாமி கேட்கிறார். மத்திய அரசு இடைத்தரகர்கள் பயன்பெறுவதைத் தடுத்து நிறுத்தியுள்ளது. இதனை பல மாநில அரசுகள் ஏற்றுள்ளன. இது நாராயணசாமிக்கு பிடிக்கவில்லை.

மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டவில்லை. புதுச்சேரிக்குத் தேவையான தகவல் தொழில்நுட்ப தொழிற்சாலை, ஜவுளி பூங்கா அமைப்பதற்கான அனைத்து அம்சங்களும் பட்ஜெட்டில் இருக்கிறது.

புதுச்சேரிக்காக பல்வேறு திட்டங்களை மத்திய அரசு அமல்படுத்தி செயல்படுத்தி வருகிறது. அனைத்து மாநிலங்களின் வளர்ச்சியை கருத்தில் கொண்டுதான் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் வரும் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும். அது மாநில வளர்ச்சிக்கான ஆட்சியாக இருக்கும். காங்கிரஸ்-திமுக கூட்டணியை மக்கள் நிராகரிப்பார்கள். புதுச்சேரியில் இந்த முறை நிச்சயம் பாஜக ஆட்சி அமைக்கும்’’இவ்வாறு மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x