Last Updated : 07 Feb, 2021 03:14 AM

 

Published : 07 Feb 2021 03:14 AM
Last Updated : 07 Feb 2021 03:14 AM

ஆனிமேரி பீட்டர்சனும் பரங்கிப்பேட்டை சேவாமந்திர் பள்ளியும்...

ஆனிமேரி பீட்டர்சன்

கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து 1921ல் காந்தியடிகள் அடிக்கல் நாட்டிய பள்ளி ஒன்று உள்ளது. இப்பள்ளி தொடர்ந்து இன்றைக்கும் மாணவிகளுக்கு கல்வி போதித்து வருகிறது.

100 ஆண்டுகளுக்கு முன்பு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் டென்மார்க் நாட்டைச் சேர்ந்த ஆனிமேரி பீட்டர்சன் என்ற பெண்மணி தமிழகத்தில் உள்ள திருக்கோவிலூர் பகுதியில் தங்கி, அப்பகுதி மக்களுக்கு சமூகச் சேவை பணிகளை செய்து வந்துள்ளார். ஆங்கிலேயர்களின் கொள்கைகளுக்கு மாறுபட்டு, இந்தியாவின் சுதந்திரத்திற்கு போராடிய காந்தியடிகளின் கொள்கை ஆனிமேரியை பெரிதும் ஈர்த்தது.

தொடர்ந்து அவர் அந்த காலக்கட்டத்தில் வெளிநாடுகளுக்கு செல்ல நீர்வழிதளமாக (கப்பல்வழி) இருந்த சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டை பகுதிக்குச் சென்று அந்த பகுதியில் உள்ள மக்களின் வாழ்வாதாரம் மற்றும் கல்வி குறித்து ஆய்வு செய்துள்ளார்.

அந்த பகுதியில் பெண்ணடிமை தனத்தை போக்க பெண்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என எண்ணிய அவர், அதே பகுதியில் ஒரு குடிசையை அமைத்துக் கொண்டு அப்பகுதிகளில் உள்ள பெண்களிடம் கல்வியறிவு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார். பின்னர் அங்கு பெண்களுக்கென்று சிறு பள்ளியை நடத்தியுள்ளார்.

இந்நிலையில் காந்தியடிகள் பங்கு பெறும் கூட்டங்களுக்கு சென்று, அவரது உரையை கேட்பதை வழக்கமாக்கிக் கொண்டார். தொடர்ந்து காந்தியிடம் கொள்கை அடிப்படையில் கடிதம் மற்றும் நேரடி தொடர்புகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டார் .

இதற்கிடையே, ‘ஆனிமேரி பீட்டர்சன் பெண் குழந்தைகள் முன்னேற்றத்திற்கு கல்விக்கூடம் ஒன்று நடத்தி வருகிறார்’ என்ற தகவல் காந்திக்கு கிடைத்துள்ளது.

இந்நிலையில் காந்தியடிகள் கடந்த 1921ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி சிதம்பரம் நகருக்கு முதன் முறையாக வந்துள்ளார். அப்போது டவுன்ஹாலில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிவிட்டு பரங்கிப்பேட்டையில் ஆனிமேரி பீட்டர்சன் நடத்தி வரும் பள்ளியை பார்வையிட சென்றுள்ளார்.

பள்ளியை பார்வையிட்ட காந்தி, குடிசையில் இருந்த பள்ளியை கட்டிட பள்ளியாக மாற்ற அடிக்கல் நாட்டி அந்த பள்ளிக்கு ‘சேவா மந்திர்’ என்று பெயரிட்டுள்ளார். பள்ளியின் தாளாளராக இருந்த ஆனிமேரி பீட்டர்சனிடம், ‘இந்தப் பகுதி ஏழை பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து கல்வி கிடைக்க தொண்டாற்ற வேண்டும்’ என கேட்டுக்கொண்டார்.

அப்போது காந்தியின் நினைவை போற்றும் வகையில், அன்று அவர் அணிந்து வந்த மிதியடியை பெற்றுக் கொண்ட பள்ளி நிர்வாகம் இன்று வரை அதனை கண்ணாடி பேழையில் பாதுகாத்து வருகிறது.

இப்பள்ளி நிதி பற்றாக்குறையால் தள்ளாடும் போதெல்லாம் தனது அரிஜன சேவை நிதியிலிருந்து அவ்வப்போது உதவி செய்துள்ளார் காந்தி. பின்னர் 1941 பிப்ரவரி மாதம் 16-ம் தேதி பள்ளியின் கல்வி சேவை குறித்து காந்தியடிகள் பள்ளிக்கு கடிதம் ஒன்று அனுப்பியுள்ளார். அதில், ‘டென்மாக் நாட்டிலிருந்து கிடைக்கும் உதவிகளை சிக்கனமாக பயன்படுத்தி கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டு, பள்ளியில் படிக்கும் பெண் குழந்தைகளின் கல்வி வளர்ச்சி குறித்து கேட்டு கடிதத்தில் எழுதியுள்ளார். அந்த கடிதமும், அடிக்கல்லும் பாதுகாக்கப்பட்டுள்ளது.

அதன் பிறகு உப்பு சத்தியாகிரகத்திற்கு செல்லும் போதெல்லாம் இந்தப் பள்ளியை காந்தி பார்த்துச் செல்வது வழக்கம். பெண் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் ஏழ்மையான பெண் குழந்தைகள் கட்டணமின்றி கல்வியில் பயன்பெறும் வகையில் இந்தப் பள்ளி 100 ஆண்டுகளுக்கு மேல் செயல்பட்டு வருகிறது.

கிறிஸ்தவ வழிபாட்டு பள்ளியாக இருந்தாலும் காந்தியின் கோட்பாடுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அகிம்சையை போதிக்கிறது. சாதி, மத பேதங்களுக்கு அப்பாற்பட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இந்த பள்ளியில் உள்ள விடுதியில் தாங்கியிருப்பதால் உண்டு உறைவிட பள்ளியாக தற்போதும் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளியில் இது வரை 1 லட்சத்துக்கு மேற்பட்ட பெண்கள் கல்வி பயின்று பல்வேறு அரசு உயர் பதவிகள், தனியார் நிறுவனங்களிலும் பதவியில் உள்ளனர். இன்று நிதி கிடைக்காமல் பள்ளி தள்ளாடினாலும் சேவையைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x