

புதுச்சேரியில் புதிதாக 35 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 32 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 3,601 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இது குறித்து, புதுச்சேரி சுகாதாரத்துறை செயலாளர் அருண் இன்று (பிப். 6) வெளியிட்டுள்ள தகவல்:
"புதுச்சேரி மாநிலத்தில் 2,015 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், புதுச்சேரியில் 25 பேருக்கும், காரைக்காலில் 8 பேருக்கும், மாஹேவில் 2 பேருக்கும் என மொத்தம் 35 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
இன்றைய தினம் கரோனா தொற்றால் யாரும் உயிரிழக்கவில்லை. இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 654 ஆகவும், இறப்பு விகிதம் 1.67 சதவீதமாகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 39 ஆயிரத்து 270 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்போது ஜிப்மரில் 22 பேர், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் 48 பேர் உட்பட மாநிலம் முழுவதும் மருத்துவமனைகளில் 112 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 205 பேரும் என மொத்தம் 317 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 38 ஆயிரத்து 299 (97.53 சதவீதம்) ஆக உள்ளது.
இதுவரை 5 லட்சத்து 88 ஆயிரத்து 451 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில், 5 லட்சத்து 44 ஆயிரத்து 590 பரிசோதனைகளுக்கு 'நெகட்டிவ்' என்று முடிவு வந்துள்ளது.
மேலும், மருத்துவப் பணியாளர்கள் 3,557 பேர், முன்கள பணியாளர்கள் 44 பேர் என மொத்தம் 3,601 பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.