Last Updated : 04 Feb, 2021 03:55 PM

 

Published : 04 Feb 2021 03:55 PM
Last Updated : 04 Feb 2021 03:55 PM

விருதுநகரில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களில் மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு

விருதுநகர்

அண்மையில் பெய்த தொடர் மழையால் விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்கள் மற்றும் பயிர்களை மத்திய குழுவினர் இன்று (வியாழக்கிழமை) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

தமிழகத்தில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக விவசாய பயிர்கள் கடுமையான சேதம் அடைந்தன. விருதுநகர் மாவட்டத்தில் காரியாபட்டி, அருப்புக்கோட்டை, திருச்சுழி, வத்ராயிருப்பு, பகுதிகளில் மழை நீரில் பயிர்கள் மூழ்கி சேதமடைந்தன.

சேதம் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாநில பேரிடர் மேலாண்மை ஆணையர் ஜெகநாதன் தலைமையில் டெல்லி உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலர் அசுதோஷ் அக்னிகோத்ரி, ஹைதராபாத்தில் உள்ள மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறையின் கீழ் இயங்கும் எண்ணெய்வித்து வளர்ச்சி இயக்குனர் மனோகரன் ஆகியோர் இன்று ஆய்வு மேற்கொண்டனர்.

அருப்புக்கோட்டை அருகே உள்ள செங்குளம், கீழ்குடி, மறவர்பெருங்குடி உள்ளிட்ட கிராம பகுதிகளில் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களையும் பயிர்களையும் மத்திய குழுவினர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது வி.நாங்கூர், துலுக்கன் குளம், அள்ளிக்குளம், அலபேரி, கீழ்குடி, கல்யாண சுந்தரபுரம், பரளச்சி உள்ளிட்ட பகுதிகளில் நெல், சிறுதானிய பயிர்கள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் சேதம் குறித்தும் வெங்காயம், மிளகாய், மல்லி பாதிப்பு குறித்தும் விவசாயிகள் முறையிட்டனர்.

மேலும், தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மத்திய குழுவினரிடம் விவசாயிகள் கோரிக்கை எழுப்பினார்.

ஆய்வின்போது மாவட்ட ஆட்சியர் கண்ணன், மாவட்ட வருவாய் அலுவலர் மங்களராமசுப்பிரமணியன், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் உத்தண்ட ராமன் மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் உடனிருந்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x