Last Updated : 02 Feb, 2021 10:11 PM

 

Published : 02 Feb 2021 10:11 PM
Last Updated : 02 Feb 2021 10:11 PM

பயணிகள், சரக்கு போக்குவரத்தில் மதுரை ரயில்வே கோட்டம் சாதனை: கோட்ட மேலாளர் தகவல்

மதுரை

பயணிகள், சரக்கு போக்குவரத்தில் மதுரை ரயில்வே கோட்டம் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளதாக கோட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் லெனின் கூறியதாவது:

வாடிப்பட்டியில் இருந்து இரண்டாவது முறையாக 25 ரயில் பெட்டிகளில் டிராக்டர்கள் வங்கதேசத்திலுள்ள பேனாபோல் ரயில் நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூ. 23,15,954/- வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

மேலும் இந்த நிதியாண்டில் தூத்துக்குடியிலிருந்து விவசாய உரப் பொருட்கள், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து நிலக்கரி, மானாமதுரையில் இருந்து கருவேலங்கரி, வாடிப்பட்டியிலிருந்து டிராக்டர்கள் ஆகியவை முதன்முறையாக ஒரே நாளில் அதிக பட்சமாக 306 ரயில் பெட்டிகளில் அனுப்பப்பட்டுள்ளன. இவற்றின் மூலம் ரூ. 1,87,98,302/- வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

இதே போன்று ஜனவரி மாதத்தில் பயணிகள் ரயில் பார்சல் வருமானமாக ரூ. 36,40,897/- ஈட்டப்பட்டுள்ளது. இது 2020 டிசம்பர் மாத பார்சல் வருமானத்தை காட்டிலும் 33 சதவீதம் அதிகம்.

தென்மாவட்டங்களுக்கு பெட்ரோல் டீசல் மண்ணெண்ய் ஆகியவற்றை ரயில் மூலம் கொண்டு வர திருப்பரங்குன்றத்தில் இருந்து கப்பலூரிலுள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் நிறுவன கிடங்கிற்கு தனி ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த ரயில் பாதையை ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை நிறுவனம் அமைத்துள்ளது. இந்த தனி சரக்கு ரயில் பாதையில் ஒரு ரயில் என்ஜினுடன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டுள்ளது. இந்த ரயில் பாதையில் விரைவில் போக்குவரத்து தொடங்கும்.

திருநெல்வேலியில் நகர்ப்பகுதியில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க திருநெல்வேலி அருகிலுள்ள கங்கைகொண்டான் ரயில் நிலையத்தில் கூடுதலாக புதிய நவீன சரக்கு நிலையம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்த சரக்கு முனையத்தில் உணவுப் பொருட்கள் போன்ற சரக்குகள் சேதமடையாமல் இருக்க கான்க்ரீட் தளங்கள், உயர் கோபுர மின் விளக்கு வசதிகள், வாடிக்கையாளர் அலுவலக அறை, தொழிலாளர் ஓய்வு அறைகள், கழிவறைகள், குளியலறைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.

பயணிகள் போக்குவரத்த்திலும் சாதனை;

கடந்த ஜனவரி மாதத்தில் மதுரை ரயில் நிலையத்திலிருந்து பிற ரயில் நிலையங்களுக்கு 1,73,559 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ. 5.81,29,188 வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

மதுரைக்கு மற்ற ரயில் நிலையங்களில் இருந்து 1,85,620 பயணிகள் வருகை புரிந்துள்ளனர். இதன்படி, திருநெல்வேலியிலிருந்து 1,23,161 பயணிகளும், தூத்துக்குடியிலிருந்து 37,965 பயணிகளும் திண்டுக்கல்லிலிருந்து 53610 பயணிகளும் விருதுநகரிலிருந்து 31,537 பயணிகளும் கோவில் பட்டியிலிருந்து 30451 பயணிகளும் வந்துள்ளனர்.

திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ. 4,96,29,930, தூத்துக்குடி ரயில் நிலையம் ரூ.1,78,19,867, திண்டுக்கல் ரயில் நிலையம் ரூ. 1,45,71,982, விருதுநகர் ரயில் நிலையம் ரூ. 1,06,19,743 , கோவில்பட்டி ரயில் நிலையம் ரூ. 1,02,72,628 வருவாய் ஈடுட்டியுள்ளன.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x