Published : 01 Feb 2021 03:12 AM
Last Updated : 01 Feb 2021 03:12 AM

ஆளுநர் பன்வாரிலால் உரையுடன் சட்டப்பேரவை முதல் கூட்டம் நாளை தொடங்குகிறது

சென்னை கலைவாணர் அரங்கில்,சட்டப்பேரவையின் இந்த ஆண்டின் முதல் கூட்டம் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையுடன் நாளை தொடங்குகிறது.

சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் வழக்கமாக ஜனவரி மாதத்தில் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இந்த ஆண்டு சற்று தாமதமாக, பிப்.2-ம் தேதி தொடங்குகிறது. அன்று காலை 11 மணிக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.

கரோனா காரணமாக பேரவை கூட்டம், கலைவாணர் அரங்கின் 3-வது தளத்தில் உள்ள பலவகை கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. ஏற்கெனவே கடந்த ஆண்டு மழைக்கால கூட்டத்தொடர், இங்குதான்நடத்தப்பட்டது. அந்த அமைப்பு கலைக்கப்படாமல் அப்படியே இருந்ததால் தற்போது அதே அரங்கில் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த ஆண்டு பொதுத் தேர்தல்நடக்க உள்ளதால் ஆளுநர் உரையில் முக்கிய திட்டங்களுக்கான அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இக்கூட்டத்தில் பங்கேற்கவரும் அனைத்து எம்எல்ஏக்கள், பேரவைச் செயலக அதிகாரிகள், பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எம்எல்ஏக்கள் தங்கள் ஊரிலில் இந்து 72 மணி நேரத்துக்கு முன் எடுத்த கரோனா பரிசோதனை முடிவை கொண்டு வரலாம் அல்லது சட்டப்பேரவை உறுப்பினர் விடுதியில் நடைபெற்ற கரோனா பரிசோதனையில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுவதை முன்னிட்டு, பேரவைத் தலைவர் பி.தனபால், செயலர் கே.சீனிவாசன் உள்ளிட்டோர் கலைவாணர் அரங்கில் ஆய்வு மேற்கொண்டு, முன்னேற்பாடுகளை துரிதப்படுத்தினர்.

பிப்.2-ம் தேதி ஆளுநர் உரைமுடிந்ததும் பேரவைத் தலைவர் பி.தனபால் தலைமையில் அலுவல்ஆய்வுக்குழு கூட்டம் நடைபெறும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x