Published : 30 Jan 2021 03:16 AM
Last Updated : 30 Jan 2021 03:16 AM

கஜா புயலால் பாதிக்கப்பட்டோருக்கு வீடு கட்டிக் கொடுக்காமல் அதிமுக அரசு ஏமாற்றிவிட்டது: கனிமொழி எம்.பி குற்றச்சாட்டு

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நெடுவாசல் நாடியம்மன் கோயில் திடலில் நேற்று இரவு நடைபெற்ற ‘விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல்’ எனும் பிரச்சாரத்தில் திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி பேசியது:

புதிய வேளாண் சட்டங்கள் மூலமும், ஹைட்ரோகார்பன், மீத்தேன் போன்ற திட்டங்கள் மூலமும் விவசாயிகளுக்கு மத்திய அரசு தீங்கு விளைவித்து வருகிறது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெளி மாநிலங் களில் இருந்து ராணுவக் கப்பல்கள் மூலம் தென்னங்கன்றுகளை கொண்டு வந்து தருவதாக இங்கு (நெடுவாசல்) வந்து வாக்குறுதி அளித்தார் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன். ஆனால், ஒரு கன்றைக்கூட கொண்டு வந்து தரவில்லை. இதேபோல, புயலால் வீடுகளை இழந்தோருக்கு தமிழக அரசு கூறியபடி வீடு கட்டிக்கொடுக்காமல் ஏமாற்றிவிட்டது என்றார்.

முன்னதாக, திருமயம் அருகே துளையானூரில் செய்தியாளர் களிடம் அவர் கூறியது:

திமுக எந்த பெரு நிறுவனங்களின் பிடியிலும் சிக்கிக் கொள்ளவில்லை. தற்போதைய சூழலுக்கேற்ப தேர்தல் உத்திகளை வகுக்க வேண்டியுள்ளது. அதற்காக ஒரு தனியார் நிறுவனத்திடம் ஒப்பந்தம் போடப்பட்டு பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன. இதையே பல கட்சிகளும் செய்து வருகின்றன.

யார் புதிதாக கட்சி தொடங்கி னாலும், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக அமரப்போவது உறுதி. யாராலும் திமுகவின் வெற்றியைத் தடுக்க முடியாது என்றார்.

இதேபோல, ஆலவயல், கோவனூர், செவலூர், அறந்தாங்கி, நாகுடி, ஆவணத்தான்கோட்டை, வடகாடு, ஆலங்குடி ஆகிய இடங்களிலும் கனிமொழி பிரச்சாரம் செய்தார்.

இதில், எம்எல்ஏக்கள் ஆலங்குடி சிவ.வீ.மெய்யநாதன், திருமயம் எஸ்.ரகுபதி, புதுக்கோட்டை பெரியண்ணன் அரசு, திமுக வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கே.கே.செல்லபாண்டியன், தேர் தல் பணிக்குழு செயலாளர் இ.ஏ.கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x