Published : 28 Jan 2021 07:16 AM
Last Updated : 28 Jan 2021 07:16 AM

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது குறித்து 31-ம் தேதிக்குள் தீர்மானிக்காவிட்டால் அரசியல் ரீதியான முடிவெடுக்கப்படும்: பாமக நிறுவனர் ராமதாஸ் திட்டவட்டம்

வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக தமிழக அரசு வரும் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும். இல்லாவிட்டால் பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் பாமக பொதுக்குழுக் கூட்டத்தில் அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்படும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.

வழக்கறிஞர்கள் சமூகநீதிப் பேரவை சார்பில் வன்னியர் உள் ஒதுக்கீடு குறித்த சந்தேகங்களும், அதற்கான விளக்கங்களும் என்ற தலைப்பில் சென்னையில் நேற்று கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், பாமக நிறுவனர் ராமதாஸ், பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் இணையவழியில் பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:

தமிழகத்தில் மொத்த மக்கள் தொகையில் வன்னியர்கள் 24 சதவீதம் உள்ளனர். அதனால் அவர்களுக்கு 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கக் கோரி கடந்த 40 ஆண்டுகளாக போராடி வருகிறோம். 2019-ம் ஆண்டு அதிமுகவுடன் தேர்தல் கூட்டணி வைத்தபோது இக்கோரிக்கையை வலியுறுத்தினோம். அது இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

கடந்தாண்டு அக்டோபர் 12-ம் தேதியும் 23-ம் தேதியும் முதல்வருக்கு கடிதம் எழுதினேன். முதல்வரிடம் இருந்து எந்த பதிலும் வரவில்லை. இதனிடையே 2 அமைச்சர்கள் என்னை சந்தித்தனர். ஞாயிற்றுக்கிழமைக்குள் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். அதன்பிறகு பொங்கலுக்கு முன்பு 2 அமைச்சர்கள் சந்தித்தனர். அவர்களிடம் இடஒதுக்கீடு கோரிக்கை விரிவாக எடுத்துரைத்தோம். முதல்வரிடம் சொல்கிறோம் என்று சொல்லிவிட்டுப் போனார்கள். இதுவரை எந்த பதிலும் இல்லை.

வன்னியர்களுக்கு 20 சதவீத தனி ஒதுக்கீடு என்ற நிலையில் இருந்து உள் ஒதுக்கீடு என்ற நிலைக்கு இறங்கி வந்துவிட்டோம். கல்வி, சமூக, பொருளாதார, அரசியலில் மிகவும் பின்தங்கியுள்ள வன்னியர்களுக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதை யாராவது எதிர்த்தால் அவர்களுக்கு பதில் சொல்லவும் தயாராக இருக்கிறோம். வன்னியர்களின் முன்னேற்றத்தில் ஆண்டவர்களுக்கும், ஆள்பவர்களுக்கும் கவலை இல்லை. ஆனால் நாங்கள் அதுபோல இருக்க முடியாது.

இந்தியாவில் எந்த மாநிலத்திலும் சாதி வாரியான கணக்கெடுப்பு அடிப்படையில் உள் இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை. தமிழ்நாட்டில் அருந்ததியர், இஸ்லாமியர்களுக்கும் அப்படித்தான் உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த உள் ஒதுக்கீடு வழங்குவதில் எவ்வித சட்டச் சிக்கலும் இல்லை. குறிப்பாக ஒரு சில மணி நேரத்திலேயே சட்டரீதியான உள் ஒதுக்கீடு வழங்க முடியும்.

எனவே, வரும் 31-ம் தேதிக்குள் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்படாவிட்டால், 31-ம் தேதி நடைபெறும் பாமக நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இதுதொடர்பாக விவாதிக்கப்படும். அதன்பிறகு பிப்ரவரி முதல் வாரத்தில் நடைபெறும் கட்சியின் பொதுக் குழுக் கூட்டத்தில் அரசியல் ரீதியாக முடிவெடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இந்த கருத்தரங்கை வழக்கறிஞர்கள் சமூக நீதிப் பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு தொகுத்து வழங்கினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x