Published : 24 Jan 2021 03:16 AM
Last Updated : 24 Jan 2021 03:16 AM

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு வரும்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலையில் விரைவில் நல்ல தீர்வு வரும் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் உள்ள பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று கோரி தொடர்ந்த வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. ஏற்கெனவே, வழக்குவிசாரணையின்போது பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானம் மீது தமிழக ஆளுநர் நீண்ட காலமாக முடிவெடுக்காமல் இருப்பது வருத்தம் அளிப்பதாக நீதிபதிகள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கில், தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தின் மீது ஆளுநர் 4 நாட்களில் முடிவு எடுப்பார் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதையடுத்து, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக ஆளுநர் 7 நாட்களில் முடிவு எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிமன்றம் விசாரணையை 2 வாரத்துக்கு தள்ளிவைத்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளுநர் விரைவில் முடிவெடுப்பார் என்று தெரிகிறது.

இந்நிலையில், துணை முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப் பாளருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் சிறையில் இருந்து விடுவிக்க சட்டப்பேரவையில் முதலில் அறிவித்ததும், அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநருக்கு பரிந்துரை செய்ததும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும், ஜெயலலிதா அரசும்தான்.

அரசின் நிலைப்பாடு

7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பதே அரசின் உறுதியான நிலைப்பாடு. இதில் விரைவில் நல்ல தீர்வு வரும் என்று எதிர்பார்க்கிறோம். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x