Published : 22 Jan 2021 03:18 AM
Last Updated : 22 Jan 2021 03:18 AM

கரோனா தொற்று காலத்தில் மகளிர் குழுவுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடன்: முதல்வர் பழனிசாமி பெருமிதம்

பல்லாவரம்

செங்கல்பட்டு மாவட்டம், பல்லாவரத்தில் மகளிர் சுய உதவிக் குழு கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வர் பழனிசாமி கலந்து கொண்டு உரையாற்றினார்.

இக்கூட்டத்தில் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: திமுக ஆட்சியில் மகளிர் சுய உதவிக் குழுவுக்கு ரூ.8,000 கோடி வங்கிக் கடன் கொடுக்கப்பட்டது. தற்போது ரூ.80,000 கோடி கொடுத்துள்ளோம். இதன் மூலம் தமிழகத்தில் சொந்த கால்களில் நின்று பொருளாதார நிலையில் பெண்கள் உயர்ந்திருக்கின்றனர். கரோனா வைரஸ் தொற்று காலத்தில் ரூ.12,000 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 18,489 மகளிர் குழுக்களுக்கு ரூ. 898 கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது. 2.84 லட்சம் மகளிருக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

பெண்களுக்கு திருமண உதவித் திட்டத்தின் கீழ் ரூ. 25,000, ரூ.50,000 ஆயிரம் நிதியுதவி வழங்கப்படுகிறது. தாலிக்கு தங்கம் திட்டத்தில் 8 கிராம் வழங்கப்படுகிறது. ஏழை எளிய கர்ப்பிணிகளுக்கு மகப்பேறு காலத்தில் ரூ.18,000 வழங்கப்படுகிறது.

2,000 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ரூ 5 லட்சம் வரை தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

ஒன்றரை லட்சம் பேர் இந்த மகளிர் சுய உதவிக் குழுவில் உறுப்பினர்களாக இருக்கின்றீர்கள். நான் சொன்ன செய்திகளை எல்லாம் மக்களிடையே எடுத்துச் சொல்லுங்கள். இது உங்களுடைய அரசு. இது மக்களுடைய அரசு. மக்களின் எண்ணங்களை நிறைவேற்றும் அரசு. இந்த அரசு போடும் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சொல்லுங்கள். பெண்கள் நினைத்தால் எதையும் சாதிக்க முடியும். சாதிக்கப் பிறந்தவர்கள் பெண்கள். அதிமுக ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x