Published : 19 Oct 2015 10:07 AM
Last Updated : 19 Oct 2015 10:07 AM

சென்னையில் தாய், மகனை கட்டிப்போட்டு 50 பவுன், ரூ.1 லட்சம் கொள்ளை

தி.நகரில் தாய், மகனை கட்டிப்போட்டு 50 பவுன் மற்றும் ரூ.1 லட்சம் பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

சென்னை தி.நகர் சின்னையா தெருவில் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் கனகராஜ்(45). இவரது மனைவி லதா(40). இவர்களது மகன் சஞ்ஜய்(8). திருச்சியில் சொந்தமாக பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார் கனகராஜ். நேற்று முன்தினம் மாலையில் தொழில் சம்பந்தமாக அவர் திருச்சி சென்றுவிட்டார். இரவு 9.45 மணியளவில் 'காலிங்பெல்' அடிக்கும் சத்தம் கேட்டு லதா கதவை திறந்தார். அப்போது முகத்தை கைக்குட்டையால் மறைத்து கட்டியிருந்த 2 பேர் லதாவை வீட்டுக்குள் தள்ளிவிட்டு உள்ளே புகுந்தனர்.

அதிர்ச்சியில் லதாவும், சஞ்ஜய்யும் சத்தம் போட இருவரின் கழுத்திலும் கத்தியை வைத்து மிரட்டியுள்ளனர். பின்னர் இருவரின் கை, கால்களை கட்டி அறையில் அடைத்துவிட்டு, லதாவிடம் பீரோ சாவி இருக்கும் இடத்தை கேட்டு எடுத்து, பீரோவை திறந்து அதிலிருந்த 50 பவுன் நகைகள், ரூ.1 லட்சம் பணத்தை கொள்ளையடித்துவிட்டு சென்றுவிட்டனர்.

நீண்ட நேரத்துக்கு பிறகு சஞ்ஜய் முயற்சி செய்து தனது கட்டுகளை அவிழ்த்து ஜன்னல் வழியாக அபயக்குரல் எழுப்ப, அதைக் கேட்டு பக்கத்து வீட்டினர் வந்து இருவரையும் மீட்டுள்ளனர்.

தகவல் அறிந்த தேனாம்பேட்டை போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சோதனை நடத்தினர். கை ரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு ரேகைகள் பதிவு செய்யப்பட்டன.

கொள்ளையர்கள் இருவரும் நன்றாக நோட்டமிட்டு, வீட்டை தேர்ந்தெடுத்து கொள்ளையடித்துள்ளனர். எனவே, இந்த குடியிருப்பை பற்றியும், கனகராஜ் வீட்டில் இருக்கும் நபர்கள் பற்றியும் நன்றாக அறிந்த நபர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x