அறுவடைக்குத் தயாராக இருந்த நெற்பயிர்கள் முளைத்ததால் விவசாயிகள் ஆத்திரம்: சிதம்பரம் புறவழிச் சாலையில் போராட்டம்

சிதம்பரம் புறவழிச்சாலையில் முளைத்த நெற்பயிருடன் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம் புறவழிச்சாலையில் முளைத்த நெற்பயிருடன் விவசாயிகள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
Updated on
1 min read

சிதம்பரம் புறவழிச் சாலையில் முளைத்த நெற்பயிருடன் விவசாயிகள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாகப் பெய்த கனமழையால் பொங்கலுக்கு அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 30 ஆயிரம் ஏக்கருக்கு மேல் விளைநிலத்தில் இருந்த நெல் கதிர்கள் சாய்ந்து தண்ணீரில் மூழ்கின. இதனால் வயல்களில் நெற்கதிர்கள் முளைத்துள்ளன. இதைப் பார்த்து வேதனை அடைந்த விவசாயிகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முறையிட்டனர். ஆனால் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (ஜன.17) நண்பகல் 12 மணியளவில் கீரப்பாளையம், குமராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் பெண்கள், தங்களின் குழந்தைகளுடன் சிதம்பரம் புறவழிச்சாலையில் முளைத்த நெற்பயிருடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும், மறு கணக்கெடுப்பு நடத்தி உரிய நிவாரணம் வழங்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பினர்.

இதற்குச் சிதம்பரம் முன்னாள் நகர் உறுப்பினர் ரமேஷ் தலைமை தாங்கினார். காவிரி டெல்டா பாசனச் சங்கங்களின் கூட்டமைப்பின் தலைவர் இளங்கீரன், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் தியாகராஜன், விவசாயி சம்பந்தமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதுகுறித்துத் தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற சிதம்பரம் தாலுகா போலீஸார், போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் சமாதானம் பேசினர். ஆனால் விவசாயிகள் சார் ஆட்சியர் அல்லது வட்டாட்சியர் நேரில் வந்து இதுகுறித்துச் சரியாக பதில் அளித்தால் மட்டுமே போராட்டத்தை வாபஸ் பெற முடியும் என்று உறுதியாகத் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அதிகாரிகள் யாரும் வராததால் விவசாயிகள் திடீரெனச் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் போலீஸார் அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் விவசாயிகள் சாலையில் படுத்துக்கொண்டு வர மறுத்தனர்.

சிதம்பரம் சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் செல்வக்குமார் சம்பவ இடத்துக்குச் சென்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அவரிடம் விவசாயிகள் மனு அளித்தனர். மனுவை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பி ஒரு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுப்பதாகச் செல்வக்குமார் உறுதியளித்ததை அடுத்து விவசாயிகள் கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சுமார் கால் மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in