Published : 16 Jan 2021 03:15 AM
Last Updated : 16 Jan 2021 03:15 AM
அதிமுகவில் இருந்து கொண்டுசசிகலாவையும், அமமுகவையும் உயர்த்தி பேசுவதை ஏற்க முடியாது என்று அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.
தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி சமீபத்தில் அளித்த பேட்டியில், அமமுகவைச் சேர்ந்தவர்கள் சகோதரர்கள் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா, சசிகலா குறி்த்து, ‘‘கட்சியின் தலைவராக இருந்தவர். அவர் எங்கிருந்தாலும் நாங்கள் மரியாதையாக போற்றக் கூடியவர். அம்மாவுடன் இருந்து தவ வாழ்க்கை வாழ்ந்தவர்’’ என்று தெரிவித்தார். இதனால் கட்சியில் இருவருக்கும் எதிர்ப்புகிளம்பியுள்ளது.
இந்நிலையில் நேற்று இருவரது கருத்து குறித்தும் அமைச்சர் ஜெயக்குமார் கூறியதாவது:
அதிமுகவின் கொள்கையை 2017-ம் ஆண்டே தெளிவுபடுத்தியுள்ளோம். சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் தலையீடு இன்றி கட்சியும் ஆட்சியும் நடைபெறும் என்று தெரிவித்துள்ளோம். அந்த நிலையில் நாங்கள் தெளிவாக உள்ளதால் எங்களுக்கு எந்தகுழப்பமும் இல்லை. உதயநிதியின் பேச்சு ஒட்டு மொத்தமாக பெண்ணினத்தை அவமானப்படுத்தும் செயலாக கருதி நாங்களே கண்டித்துள்ளோம்.
ஆனால், கோகுல இந்திரா அதிமுகவில் இருந்து கொண்டு சசிகலாவை உயர்த்தி பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. அவர் சார்ந்திருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். யாராக இருந்தாலும் கட்சியின் கொள்கைகளுக்கு ஒத்துழைப்புதருவதுதான் முக்கியம்.
அதேபோல், ராஜேந்திர பாலாஜி கூறுவதையும் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்ற தேர்தலில் இரட்டை இலைசின்னத்தை எதிர்த்து போட்டியிட்டவர்கள் சகோதரர்களா? கட்சி ஒரு முடிவெடுத்துவிட்ட பின், அதை பின்பற்ற வேண்டும். இரட்டை இலையும் சின்னமும் அதிமுகவின் சொத்து. இந்த மாதிரியாக கருத்துக்களை யாரும் சொல்லக் கூடாது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT