

புதுச்சேரியில் இன்று புதிதாக 28 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், மேலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் மோகன்குமார் இன்று (ஜன.15) கூறியதாவது:
‘‘புதுச்சேரி மாநிலத்தில் 1,691 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில் புதுச்சேரியில் 16 பேருக்கும், மாஹேவில் 12 பேருக்கும் என மொத்தம் 28 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இன்றைய தினம் காரைக்கால், ஏனாமில் யாருக்கும் தொற்று இல்லை.
மேலும் உயிரிழப்பும் ஏற்படவில்லை. இதுவரை கரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 640 ஆகவும், இறப்பு விகிதம் 1.66 ஆகவும் உள்ளது. புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 38 ஆயிரத்து 595 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். மருத்துவமனைகளில் 118 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டோர் 176 பேரும் என மொத்தம் 294 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
இன்று 32 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 661 (97.58 சதவீதம்) ஆக உள்ளது. இதுவரை 5 லட்சத்து 27 ஆயிரத்து 780 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 4 லட்சத்து 84 ஆயிரத்து 588 பரிசோதனைகளுக்கு ‘நெகட்டிவ்’ என்று முடிவு வந்துள்ளது’’.
இவ்வாறு மோகன்குமார் தெரிவித்துள்ளார்.