Published : 14 Jan 2021 03:19 AM
Last Updated : 14 Jan 2021 03:19 AM
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு துணையாக தவ வாழ்க்கை வாழ்ந்த சசிகலாவை தவறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
கடந்த 5-ம் தேதி சென்னை சேப்பாக்கத்தில் நடந்த திமுக பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய உதயநிதி ஸ்டாலின் முதல்வர் பழனிசாமி, சசிகலா குறித்து பேசியது பெரும்சர்ச்சையாகியுள்ளது. பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், நடிகை குஷ்பு உள்ளிட்டோர் உதயநிதிக்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், உதயநிதியைக் கண்டித்து அதிமுக சார்பில் சென்னையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா பங்கேற்றார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘‘சசிகலா குறித்தும், முதல்வர் பழனிசாமி குறித்தும் உதயநிதி ஸ்டாலின் பேசியது அநாகரிகமானது. கடும்கண்டனத்துக்குரியது.
பெண்கள் குறித்து திமுகவினர் குறிப்பாக உதயநிதி மனதில் என்ன இருக்கிறது என்பது தெரிகிறது. ஒட்டுமொத்த பெண் சமுதாயத்தையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியஉதயநிதி மீது வழக்கு தொடர்ந்துள்ளோம். ஜெயலலிதாவுக்கு துணையாக தவ வாழ்க்கை வாழ்ந்தவர் சசிகலா. அவரை தவறாக பேசுவதை ஏற்க முடியாது’’ என்றார்.
27-ம் தேதி விடுதலை
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை விதிக்கப்பட்டு கடந்த4 ஆண்டுகளாக பெங்களூர் சிறையில் இருக்கும் சசிகலா, வரும் 27-ம்தேதி விடுதலையாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அவருக்கு ஆதரவாக அதிமுக முக்கிய பிரமுகர் கருத்து கூறியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
சசிகலா சிறையில் இருந்து வெளியே வந்ததும் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவார். அதிமுக அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், முக்கிய நிர்வாகிகள் பலர் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிப்பார்கள். அதிமுக பொதுச்செயலாளராக மீண்டும் சசிகலா வரவும் வாய்ப்புள்ளது என்று பேசப்பட்டு வரும் நிலையில், சசிகலாவுக்கு ஆதரவாக கோகுலஇந்திரா பேசியிருப்பது தமிழகஅரசியலில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT