Published : 11 Jan 2021 03:25 AM
Last Updated : 11 Jan 2021 03:25 AM
செங்கல்பட்டை அடுத்த பரனூர், ஏரிக்கரை தெருவைச் சேர்ந்த 40 வயது பெண், மின்சார ரயில்களில் பழங்கள் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.
இவர் கடந்த 8-ம் தேதி இரவு பல்லாவரம் பகுதிக்கு வந்து, பின்னர் பரனூர் செல்வதற்காக செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயிலில் பயணித்துள்ளார். குடிபோதையில் இருந்த அப்பெண் ரயிலில் தூங்கி விட்டதாக கூறப்படுகின்றது.
நள்ளிரவு ஆகிவிட்டதால் பணி முடிந்து, அந்த ரயில் தாம்பரம் ரயில்வே பணிமனைக்கு சென்று உள்ளது. அப்போது ரயில்களை சுத்தம் செய்ய அங்கு வந்த தற்காலிக ஊழியர்கள் இருவரும் அந்தப் பெண்ணை கட்டாயப்படுத்தி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் அந்தப் பெண் சம்பவம் குறித்து தாம்பரம் ரயில்வே போலீஸாரிடம் புகார் அளித்தார்.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த போலீஸார் இதுதொடர்பாக மேற்கு தாம்பரம், ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (30), சேலையூர் அருகே நெடுங்குன்றம் ஊராட்சி மப்பேடு பகுதியைச் சேர்ந்த சுரேஷ் (30) ஆகியோரை கைது செய்தனர். பின்னர் அவர்களை தாம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீஸார் புழல் சிறையில் அடைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT