Published : 06 Jan 2021 03:39 PM
Last Updated : 06 Jan 2021 03:39 PM

தனியார் கல்லூரிகளில் 50% இடங்கள் அரசுக்கு ஒதுக்கீடு: மேல்முறையீட்டு வழக்கில் 3 கல்லூரிகள், புதுவை அரசுக்கு உயர் நீதிமன்றம் நோட்டீஸ்

புதுச்சேரியில் 3 தனியார் மருத்துவக் கல்லூரிகள் தங்கள் இடங்களில் 50 சதவீதத்தை அரசுக்கு ஒதுக்கக் கோரிய மேல்முறையீட்டு வழக்கில், 3 கல்லூரிகளும், புதுவை அரசும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதுச்சேரியில் உள்ள ஸ்ரீ மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி மருத்துவ அறிவியல் கல்வி நிறுவனம், ஸ்ரீ வெங்கடேஷ்வரா மருத்துவக் கல்லூரி ஆகியவை தலா 55 இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கின.

இதுகுறித்த அறிவிப்பை ரத்து செய்து, இந்தக் கல்லூரிகளில் உள்ள தலா 150 இடங்களில், 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டு இடங்களாக ஒதுக்கீடு செய்ய உத்தரவிடக் கோரி, அபிராமி, ஸ்வேதா உள்ளிட்ட ஏழு மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர்.

அந்த மனுக்களில், 2006-ம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட மாணவர் சேர்க்கை விதிகளின்படி தனியார் மருத்துவக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசு ஒதுக்கீட்டிற்கு வழங்க வேண்டுமென ஒப்பந்தம் போடப்பட்டதாகக் குறிப்பிட்டனர்.

இந்த வழக்குத் தொடர்பாக பதிலளித்த புதுச்சேரி அரசு, புதுச்சேரியைச் சேர்ந்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டம் இயற்றி மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், 50 சதவீத இடங்களை வழங்க மறுத்துள்ளதாகவும், அதனால் 50 சதவீத இடங்களை ஒதுக்க வேண்டுமெனவும் கோரப்பட்டது.

ஆனால், 2006-ம் ஆண்டு கொண்டு வரப்பட்ட விதிகள் தற்போது பொருந்தாது என்று கல்லூரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி, இந்தக் கல்லூரிகள் 50 சதவீத இடங்களை அரசுக்கு ஒதுக்க ஒப்புக்கொண்டுள்ளதாக முடிவுக்கு வர எவ்வித ஆதாரமும் இல்லை. 2006-ம் ஆண்டு விதிகளில் கூட "50 சதவீத இடங்கள் வரை ஒதுக்கீடு செய்யலாம்" என்றே கூறியுள்ளதன் மூலம், ஒதுக்கீடு குறித்த முடிவை சம்பந்தப்பட்ட கல்லூரிகள் முடிவிற்கே விடப்பட்டுள்ளது எனக் கூறி மனுக்களைத் தள்ளுபடி செய்து டிசம்பர் 12-ம் தேதி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து மாணவிகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கு குறித்து மூன்று தனியார் மருத்துவக் கல்லூரிகளும், புதுச்சேரி அரசும், சென்டாக் அமைப்பும் 6 வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.

மேலும், மாணவர் சேர்க்கை இந்த மேல்முறையீட்டு வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு உட்பட்டது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x