Last Updated : 05 Jan, 2021 11:34 AM

 

Published : 05 Jan 2021 11:34 AM
Last Updated : 05 Jan 2021 11:34 AM

கோவை செம்மேடு அருகே மின்வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு: நெல்வயல் உரிமையாளர் தலைமறைவு

கோவை செம்மேடு பகுதியில் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த ஆண் யானை.

கோவை

கோவை செம்மேடு பகுதியில் நெல் வயலைச் சுற்றி போடப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி ஆண் யானை ஒன்று இன்று உயிரிழந்தது.

கோவை போளுவாம்பட்டி வனச்சரகத்துக்கு உட்பட்ட செம்மேடு கரும்புக்காட்டுபதி, குளத்தேரியில் துரை (எ) ஆறுச்சாமியின் நெல் வயல் உள்ளது. அதைச் சுற்றி போடப்பட்டிருந்த இரும்பு கம்பி வேலியில் சிக்கி 20 வயதுடைய ஆண் யானை ஒன்று இறந்துகிடப்பதாக இன்று (ஜன. 05) காலை வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.

இந்த தகவல் கிடைத்ததும், முள்ளாங்காடு சோதனைச்சாவடிக்கு அருகே மற்றொரு ஆண் யானையை காட்டுக்குள் திருப்பி அனுப்பும் பணியில் ஈடுபட்டிருந்த வனப்பணியாளர்கள் சம்பவ இடத்துக்கு சென்றனர். உடனடியாக மின்சார வாரிய அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டனர். வனச்சரகர், மின்வாரிய அதிகாரிகள் அப்பகுதியை ஆய்வு செய்தனர்.

இது தொடர்பாக வனத்துறையினர் கூறும்போது, "துரையின் பண்ணை வயலைச் சுற்றி இரும்பு கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. வயர் மூலம் பிரதான கம்பத்தில் இருந்து மின்சாரம் திருடப்பட்டு இரும்பு கம்பி வேலிக்கு நேரடியாக செலுத்தியுள்ளனர்.

பண்ணையின் உரிமையாளர் துரை நேற்று (ஜன. 04) இரவு தனது தோட்டத்தில் இருந்ததாக அருகிலுள்ள தோட்டத்து உரிமையாளர் ஒருவர் தெரிவித்துள்ளார். யானை மின்வேலியில் சிக்கி இறந்ததை அறிந்தவுடன் வேலிக்கு மின்சாரம் வழங்கிய வயர்களை அகற்றிவிட்டு அவர் தலைமறைவாகியுள்ளார். வன உயிரின சட்டத்தின்கீழ் அவருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவான அவரை தேடி வருகிறோம்" என்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x