Published : 26 Oct 2015 09:04 PM
Last Updated : 26 Oct 2015 09:04 PM
நரேந்திர மோடி அரசுக்கு எதிராக மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் அக்டோபர் 31-ம் தேதி திருச்சியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்துக்கு அணி திரண்டு வருமாறு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
மத்தியில் நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு இந்துத்துவ வெறியர்களின் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இந்தியாவின் பன்முகத்தன்மையை சீரழிக்கும் வகையில் ஒரே மதம், ஒரே நாடு என பேசி வருகின்றனர். இந்து ராஷ்டிரம் என முழங்கிக் கொண்டிருந்தவர்களின் கரங்களில் ஆட்சி அதிகாரம் சென்றுள்ளதால் சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்துவிட்டன.
மாட்டிறைச்சி சாப்பிட்டதாக ஒருவர் கொல்லப்படும் அளவுக்கு நிலைமை மோசமாகியுள்ளது. கருத்துரிமைக்கு எதிரான தாக்ருதல்களைக் கண்டித்து 40-க்கும் அதிகமான எழுத்தாளர்கள் சாகித்ய அகாடமி விருதுகளை திருப்பி அளித்துள்ளனர். ஆனாலும் பிரதமர் மோடி மவுனம் சாதித்து வருகிறார்.
இதனைக் கண்டித்து மக்கள் நலக் கூட்டியக்கத்தின் சார்பில் வரும் 31-ம் தேதி திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இதில் மதிமுக, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் பெருமளவில் கலந்து கொள்ள வேண்டும் என வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT