Last Updated : 02 Jan, 2021 03:24 AM

 

Published : 02 Jan 2021 03:24 AM
Last Updated : 02 Jan 2021 03:24 AM

தமிழகத்தில் விற்பனையை முறைப்படுத்த எம்-சாண்ட் கொள்கை விரைவில் வெளியீடு

சென்னை

தமிழகத்தில் எம்-சாண்ட் விற்பனையை முறைப்படுத்த, எம்-சாண்ட் கொள்கையை அரசு விரைவில் அறிவிக்கவுள்ளது.

தமிழகத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அனுமதியுடன் ஆயிரத்துக்கும் மேற்பட்ட எம்-சாண்ட் (நொறுக்கப்பட்ட கல்மணல்) தயாரிப்பு நிறுவனங்கள் செயல்படுகின்றன. வருவாய்த் துறை மூலம் கல்குவாரி பெற்று இந்தநிறுவனங்கள் எம்-சாண்ட் தயாரித்து விற்கின்றன.

ஆனால், இவற்றில் பெரும்பாலான நிறுவனங்கள் தரமான எம்-சாண்ட் விற்கவில்லை என்று புகார்கள் வந்தன. இதையடுத்து எம்-சாண்ட்டின் தரத்தை அரசு நிர்ணயம் செய்து அதற்கான தரச் சான்றிதழை பொதுப்பணித் துறை (கட்டிடம்) வழங்கி வருகிறது.

இதுவரை 270 நிறுவனங்களுக்கு எம்-சாண்ட் தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் 50 நிறுவனங்களுக்கு தரச் சான்று வழங்கும் நடைமுறைகள் நிலுவையில் உள்ளன. மற்ற நிறுவனங்களும் தரச் சான்று பெற அரசு அறிவுறுத்தி வருகிறது.

மேலும், எம்-சாண்ட் தயாரிப்புமற்றும் விற்பனையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுடன் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. இதைத்தொடர்ந்து எம்-சாண்ட்தயாரிப்பு, தரம், விற்பனை தொடர்பானவற்றை முறைப்படுத்துவதற் காக எம்-சாண்ட் கொள்கை உருவாக்கும் பணி நிறைவடைந்துள்ளது. அரசு விரைவில் எம்-சாண்ட் கொள்கையை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:

எம்-சாண்ட் கொள்கை தொடர் பான கருத்துக் கேட்புக் கூட்டம் தமிழக பொதுப்பணித் துறை (கட்டிடம்) தலைமைப் பொறியாளர் ராஜாமோகன் தலைமையில் 3 முறை நடைபெற்றது. இதில், எம்-சாண்ட் உற்பத்தியாளர்கள் சங்கம், லாரி ஓட்டுநர்கள் சங்கம், பில்டர்ஸ் அசோசியேஷன், தனியார் கட்டுமான நிறுவனங்கள் ஆகியவற்றின் பிரதிநிதிகள், தமிழ்நாடு கனிமவள நிறுவனம், மாசு கட்டுப்பாட்டு வாரியம், பொதுப்பணித் துறை (கட்டிடம்) அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

தரமற்ற எம்-சாண்ட் தயாரித்து விற்றால் அவர்களை 2 ஆண்டுகள் சிறையில் அடைக்க கர்நாடகாவில் எம்-சாண்ட் கொள்கை உருவாக்கப் பட்டுள்ளது. அதுபோல தமிழகத் திலும் தரமற்ற எம்-சாண்ட் தயாரித்து விற்றால் 2 ஆண்டுகள் சிறை, ரூ.5 லட்சம் அபராதம் அல்லது இரண்டும் என்பது உள்ளிட்ட அம்சங்கள் கொள்கையில் இடம்பெற்றுள்ளன.

இது தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டத்தில், “மேற்கண்ட சிறை தண்டனையை 6 மாதமாககுறைக்க வேண்டும். தண்டனைக் காலம் அதிகமாக இருந்தால் இத்தொழிலில் ஈடுபட புதியவர்கள் வர தயங்குவார்கள்.

அரசு வழங்கும் தரச் சான்றிதழை 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைபுதுப்பிக்க வழிவகை செய்ய வேண்டும். தற்போது தரச் சான்றுக்கான அனுமதி 3 ஆண்டு களாக உள்ளது. லாரியில் எம்-சாண்ட் லோடு ஏற்றும்போது ஈரப்பதமாக இருக்கக்கூடாது. அதை எடுத்துச் சென்று வாடிக்கை யாளர்களிடம் வழங்கும்போது எடை குறைவாக இருக்கிறது. அதனால் நன்கு உலர்ந்த எம்-சாண்ட்டை லாரியில் ஏற்ற வேண்டும். விலையை அரசே நிர்ணயிக்க வேண்டும்” என்று கோரிக்கைகள் விடுக்கப்பட்டன.அதற்கு தலைமை பொறியாளர் ராஜாமோகன் பதில் அளிக்கையில், “எம்-சாண்ட் விலையை அரசுநிர்ணயிக்க முடியாது. ஏனென்றால் ஆற்றுமணல் அரசுக்கு சொந்தமானது என்பதால் அரசு விலையை நிர்ணயிக்கிறது. எம்-சாண்ட்டை தனியாரே தயாரிப்பதால், அவர்களே ஒரு அமைப்பை ஏற்படுத்தி விலையை நிர்ணயித்துக் கொள்ளவேண்டும்” என்று அறிவுறுத்தினார்.

கருத்து கேட்பு கூட்டங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் அடிப்படையில் எம்-சாண்ட் கொள்கையில் திருத்தம் செய்யலாம் என்றுஅரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். அவற்றை அரசு பரிசீலித்து அனுமதி அளித்ததும், அதைத் தொடர்ந்து சட்ட அனுமதி பெற்று எம்-சாண்ட் கொள்கை விரைவில் வெளியிடப்படும்.

தற்போது எம்-சாண்ட் ஒரு கனஅடி விலை ரூ.40. இரண்டு யூனிட் (200 கனஅடி) கொண்ட ஒரு லாரி லோடு ரூ. 8 ஆயிரத்துக்கு விற்கப்படுகிறது.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x